18 மசோதா தயார்.. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.. டிச.22 வரை நடக்கிறது
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.. டிசம்பர் 22ம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடரில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, இந்திய தண்டனை சட்ட பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் உள்பட 18 மாசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் லோக்சபா (மக்களவை), ராஜ்யசபா(மாநிலங்களை) உள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் 18 ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட்டது. இதில் நீண்டகாலமாக இருந்த பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு அந்த மசோதா ஜனாதிபதி திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து எம்பிக்கள் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு இடம்பெயர்ந்தனர். அதன்பிறகு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முடிந்தது. நாடாளுமன்ற இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற மழைக்கால (குளிர்கால) கூட்டத்தொடர் நவம்பர் 4ம் தேதி தொடங்கும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்து இருந்தார். அதன்படி இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் பங்கேற்று சபை நிகழ்வுகள் தொடங்கி உள்ளன. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. டிசம்பர் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இன்று தொடங்கிய இந்த மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்திய தண்டணை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல மசோதாக்கள் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே நாடாளுமன்ற மழைக்கால தொடரை சுமூகமாக நடத்துவதற்கும், மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்கவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications