நாடாளுமன்ற தாக்குதல்- லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி-எம்பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று அத்துமீறி நுழைந்து எம்.பிக்கள் மீது புகை பொருட்களை 4 பேர் வீசிய சம்பவத்தை முன்வைத்து இன்று லோக்சபா, ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்த அதே நாளில் நேற்றும் நாடாளுமன்றத்துக்குள் 4 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்களில் 2 பேர் தங்களது கைகளில் கொண்டு வந்த புகை பொருட்களை லோக்சபாவில் வீசினர். லோக்சபாவுக்குள் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர். இதேபோல நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று புகை பொருட்களை வீசிய மேலும் 2 பேரும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இந்த சம்பவங்களில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார்.

மகாராஷ்டிரா, ஹரியானாவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். பாஜக எம்பி ஒருவரிடம் இருந்து பெற்ற பார்வையாளர் நுழைவுச் சீட்டு மூலமே இந்த 4 பேரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் வழக்கம் போல கூடியது. நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பார்வையாளருக்கான பாஸ் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. பத்திரிகையாளர்களும் வழக்கமான இடத்தில் இருந்து சற்று தொலைவில்தான் நிறுத்தப்பட்டனர்.
இன்று காலை இரு சபைகளும் கூடிய போது, எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் எழுந்து நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினர். லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் தரவும் அவர்கள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் இரு சபைகளிலும் கட்டுக்கடங்காத அமளி ஏற்பட்டது. இதனையடுத்து லோக்சபா பகல் 2 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா பிற்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபா பகல் 12 மணிக்கு கூடிய போதும் இந்த அமளி நீடித்தது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் அமளியில் ஈடுபட்டதால் நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அத்துடன் ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பும் செய்தனர்.
இதனிடையேல் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் கனிமொழி, மாணிக்கம் தாகூர், சுப்பராயன், ஜோதிமணி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் முற்றாக முடங்கின.
முன்னதாக பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரகலாத் ஜோஷி, அனுராக் தாக்கூர் மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications