பாஜகவிற்கு சாதகமாக செயல்படுவதாக சர்ச்சை.. பேஸ்புக்கிற்கு சம்மன்.. நாடாளுமன்ற நிலைக்குழு அதிரடி
டெல்லி: பாஜகவை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.
பாஜகவை சேர்ந்த அரசியல் தலைவர்களின் பதிவுகளுக்கு வெறுப்பு பேச்சுக்கான விதிமுறைகளை பேஸ்புக் அமல்படுத்துவது இல்லை என்றும், பிற கட்சியினருக்கு மட்டும் இதுபோன்ற கெடுபிடிகளை பேஸ்புக் நிறுவனம் செய்கிறது என்பதும் குற்றச்சாட்டு.

இந்த நிலையில்தான், நாடாளுமன்றத்தின் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு, பேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி இந்த சம்மனுக்கு பேஸ்புக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பேஸ்புக் பிரதிநிதிகள் மட்டுமின்றி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சக பிரதிநிதிகளும் செப்டம்பர் 2 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமைகளை பாதுகாப்பது, சமூக வலைத்தளங்களையும், ஆன்லைன் செய்தி மீடியா பிளாட்பார்ம்களையும், தவறாக பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்டவை பற்றி விவாதிப்பதற்காக இந்த கூட்டம் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பியுமான சசி தரூர் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா செயலகம் வெளியிட்ட நிகழ்ச்சி நிரல் அறிவிப்புகளின்படி, செப்டம்பரில் நடைபெறும் கூட்டத்திற்கு, தகவல் தொடர்பு மற்றும் உள்துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள், பீகார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் டெல்லி அரசு பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம், இந்திய பத்திரிகை கவுன்சில் மற்றும் பிரசர் பாரதி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications