வேட்பாளர்களின் குற்றப்பின்னணி பற்றி.. 48 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும்.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: சட்டசபை தேர்தல் , லோக்சபா தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அவர்களுடைய குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்மந்தப்பட்ட அரசியல்கட்சிகள் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை 2 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் என புதிய காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்து இருக்கிறது.
இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பற்றி பார்க்கும் 2020 பிப்ரவரி 13ம் தேதி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து பார்க்கலாம். இந்த வழக்கை அப்போது உச்ச நீதிமன்றை நீதிபதிகள் ரோஹின்டன் நாரிமன், ரவீந்தர் பட் அமர்வு விசாரித்தது.
இந்த விசாரணையின் முடிவில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை அனைத்து கட்சிகளும் பொதுவில் வெளியிட வேண்டும். இதை 2 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

உத்தரவு
இந்த உத்தரவில், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த அனைத்து விவரங்களும் முழுமையாக இருக்க வேண்டும். இதற்கு முன் அவர்கள் செய்த குற்றங்கள், அதில் வந்த தீர்ப்புகள், தற்போது நிலுவையில் உள்ள குற்றங்கள், அதன் மீதான வழக்கு விசாரணைகள் குறித்த விவரங்கள் அடங்கி இருக்க வேண்டும். முக்கியமாக அந்த வழக்கு ஜோடிக்கட்டதோ இல்லையோ.. வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தாலே அதை பற்றிய விவரம் இருக்க வேண்டும்.

ஏன் தேர்வு
அதோடு ஒரு வேட்பாளரை தேர்வு செய்தது ஏன்? குற்றமுள்ள ஒரு வேட்பாளரை எந்த அடைப்படையில் கட்சி தேர்வு செய்தது என்றும் விவரங்கள் இருக்க வேண்டும். மேலும் குற்றமில்லாத இன்னொரு நபருக்கு பதிலாக இவரை தேர்வு செய்தது ஏன் என்றும் விவரம் இருக்க வேண்டும். இதெல்லாம் போக அந்த வேட்பாளரின் கல்வித்தகுதி, பொது சேவை, மற்ற தகுதிகள் குறித்த விவரங்களும் இடம்பெற வேண்டும். இந்த அனைத்து விவரங்களும் கட்சியின் இணைய பக்கத்தில் இருக்க வேண்டும்.

குற்றம்
அவர்கள் செய்த குற்றங்கள் குறித்த விபரங்கள் தேசிய, மாநில நாளிதழ்களில் வெளியிடப்பட வேண்டும் என்று அந்த பழைய உத்தரவில் உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த உத்தரவை அரசியல் கட்சிகள் பல மதிக்கவில்லை என்று புகார் எழுந்தது. முக்கியமாக பீகார் சட்டசபை தேர்தலின் போது இந்த உத்தரவை அரசியல் கட்சிகள் மீறியதாகவும், இது தொடர்பாக கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன், பிஆர் காவாய் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

விசாரணை
பிரபல வழக்கறிஞர் பிரஜேஷ் மிஸ்ரா இந்த வழக்கை தொடுத்து இருந்தார். அதில் பீகார் தேர்தலில் கட்சிகள் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டன. வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து இவர்கள் விவரங்களை வெளியிடவில்லை. இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய கட்சிகளின் சின்னங்களை உடனே ரத்து செய்ய வேண்டும். அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

கட்சி
அந்த வேட்பாளர்கள் மீதும், கட்சி மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் விசாரணை நடந்து முடிந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தனது உத்தரவுகளை இதில் வெளியிட்டது. அதன்படி கடந்த பீகார் தேர்தலில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத, காங்கிரஸ், பாஜக, சிபிஎம், சிபிஐ 8 கட்சிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது,, பா.ஜ.க, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

உத்தரவு
மேலும், இனி வரும் காலங்களில் சட்டசபை, லோக்சபா தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அவர்களுடைய குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். கட்சியின் இணைய பக்கங்கள், தேசிய, மாநில நாளிதழ்களில் இது வெளியிடப்பட வேண்டும். 2020 உத்தரவில் குறிப்பிடப்பட்ட அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். ஆனால் 2 வார கால அவகாசத்திற்கு பதிலாக 2 நாட்களுக்குள் அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கேராளாவின் சிபிஎம் கட்சி 4 வேட்பாளர்களை குற்றப்பின்னணியோடு நிறுத்தியதாகவும், தேசியவாத காங்கிரஸ் 26 வேட்பாளர்களை நிறுத்தியதாகவும், பீகார் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 103 வேட்பாளர்களை குற்றப்பின்னணியோடு நிறுத்தியதாகவும், ஐக்கிய ஜனதா தளம் 56 வேட்பாளர்களை குற்றப்பின்னணியோடு நிறுத்தியதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டது.

உத்தரவு
இந்த வழக்கில் என்சிபி, சிபிஎம் ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம், உங்கள் மன்னிப்பை நாங்கள் ஏற்க முடியாது. எங்கள் உத்தரவை மதிப்பதே உங்கள் கடமை. கோர்ட் அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மதித்து அபராதம் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு தேர்தல் ஆணையத்திற்கு இதில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்
அதன்படி வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அறிவிக்கும் வகையில் தனி செயலியை உருவாக்க வேண்டும். இதற்காக டிவி, சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவின்படி பின்வரும் விவரங்களை வேட்பாளரை தேர்வு செய்த 48 மணி நேரங்களுக்குள் கட்சிகள் வெளியிட வேண்டும்.
1. வேட்பாளரின் குற்றப்பின்னணி. கடந்த காலம் மற்றும் நிகழ்கால வரலாறு.
2. குற்றப்பின்னணி இல்லாத வேட்பாளருக்கு பதில் குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டது ஏன்?
3. குற்றப்பின்னணி உள்ள வேட்பாளரின் தகுதிகள்.
4. இந்த விவரங்கள் கட்சி வெப்சைட், தேசிய, மாநில நாளிதழ்களை வழங்கப்பட வேண்டும்.
5. இந்த உத்தரவை பின்பற்றியதை உறுதி செய்து அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications