கடைசியாக ஒருமுறை பறக்கும் விஸ்தாரா.. பிரியா விடை கொடுத்த பயணிகள்!
டெல்லி: இந்திய விமான சேவைகளில், தரமான சேவைகளுக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பெயர் பெற்றதாகும். இந்நிலையில் இது நவ.12ம் தேதி (நாளையுடன்) ஏர் இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படுகிறது. எனவே, பயணிகள் கடைசியாக ஒருமுறை விஸ்தாராவுக்கு விடை கொடுத்திருக்கின்றனர்.
விஸ்தாராவின் கதை ரொம்ப சுவாரசியமானது. அதாவது இந்தியாவில் விமான சேவையை தொடங்கியது ஜஹாங்கீர் ரத்தன்ஜி தாதாபோய் டாடாதான். இவர் முதலில் கராச்சியிலிருந்து மும்பைக்கு கடிதங்களை கொண்டுவர, ஒற்றை என்ஜின் கொண்ட விமானத்தை தொடங்கினர். அதன் பின்னர் போயிங் விமானங்களை கொண்டு பயணிகள் விமான சேவையை தொடங்கினார். பணக்காரர்கள் மத்தியில் விமான சேவைக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. ஆனால் 2ம் உலகப்போர் முடிந்த பின்னர், இந்த விமான சேவையை 1953ல் அப்போதைய மத்திய அரசு இதை தேசியமயமாக்கியது. பின்னர் 1960ல் இதற்கு 'ஏர் இந்தியா' என்று பெயரும் வைக்கப்பட்டது.

டாடா வசம் இருந்த விமான சேவை தேசியமயம் ஆனதால் புதிய விமான சேவையை தொடங்க டாடா குழுமம் முடிவெடுத்தது. இப்படி உருவானதுதான் விஸ்தாரா ஏர்லைன்ஸ். சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் டாடா சன்ஸ் கைகோர்த்து இந்த விமான சேவை தொடங்கப்பட்டது. ஏர் இந்தியாவை விட விஸ்தாரா தரமான சேவையை வழங்கியதால், ரொம்ப சீக்கிரமாகவே மக்கள் மத்தியில் இந்த ஏர்லைன்ஸ் பெயர் பெற்றுவிட்டது. சாமானிய மக்களுக்கு ஏற்றார் போல ஓரளவுக்கு நியாயமான விலையில் சேவை வழங்கியதாலும், மக்கள் விஸ்தாராவை விரும்பினர்.
எனவே, டிக்கெட் முன்பதிவு அதிகரிக்க தொடங்கியது. மற்ற ஏர்லைன்கள் போயிங் ரக விமானங்களை பயன்படுத்தியபோது, விஸ்தாரா தனது சேவைக்கு 'ஏர் பஸ்' ரக விமானத்தையே அதிக அளவு பயன்படுத்தியது. எனவே, மற்ற விமானங்களை விட விஸ்தாரா விமானங்கள் மிகவும் சவுகரியமாக இருந்தது. இருக்கைகள் போதுமான இட வசதியுடன் இருந்தன. தொடக்கத்தில் டெல்லி-மும்பை என்று மட்டும் இருந்த சேவை பின் நாட்களில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரிவாக்கப்பட்டது.
இடையில் டாடாவிடம் இருந்து தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா, மீண்டும் டாடா வசமே ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எனவே, இந்த விமான சேவையை மேலும் விரிவாக்க இத்துடன் விஸ்தாராவையும் இணைக்க டாடா விரும்பியது. 2022ல் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. 2024 செப்டம்பர் 3ம் தேதிக்கு பிறகு விஸ்தாரா பெயரில் விமான டிக்கெட் புக்கிங் என்பது முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அந்த வகையில் இன்றுதான் விஸ்தாரா விமான சேவையின் கடைசி நாளாகும்.

நாளை முதல் இந்த விமானங்கள் ஏர் இந்தியா என்கிற பெயரில் பறக்கும். புங்கிங்கும் ஏர் இந்தியா வெப்சைட்டில் மட்டுமே செய்யப்படும். விஸ்தாரா விமானத்தின் பெயிண்ட்டும், லோகோவும் மட்டுமே மாறுமே தவிர, சேவையில் எந்த குறைபாடும் இருக்காது.. வழக்கம் போல சிறப்பான சேவையையே இந்த விமானங்கள் வழங்கும் என்று டாடா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருவேளை நீங்கள் நவ.12ம் தேதிக்கு விஸ்தாரா விமானத்தில் பயணிப்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், அந்த டிக்கெட்டுகள் ஏர் இந்தியாவுக்கு மாற்றப்படும். எனவே, விஸ்தாரா இல்லையா? அப்போ டிக்கெட் ரத்தாகிவிடுமா? என்று அச்சப்பட வேண்டாம்.
இந்தியவின் சிறந்த விமான சேவைகளில் ஒன்றான விஸ்தாரா, தனது பயணத்தை இன்றுடன் முடித்துக்கொள்கிறது என்பதை விமான பயணிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, சோஷியல் மீடியாக்களில் விஸ்தாரா குறித்த தங்கள் நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications