நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம்.. மத்திய அரசு அறிவிக்க போகும் மேஜர் குட் நியூஸ்
டெல்லி: நாட்டில் தற்போது அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டப்படி அரசு பணியாளர்கள் மற்றும் அரசின் பங்களிப்போடு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. நாட்டு மக்கள் அனைவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இந்த முடிவு பற்றி பார்ப்போம்.
தற்போதைய நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அரசு ஊழியர்கள் போராடி வருவதை நாம் பார்த்திருப்போம். அவர்கள் போராடுவதற்கு காரணம், வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.ஆனால் அவர்களுக்கு பழைய ஓய்வூதியத்திற்கு பதில் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் அமலில் இருக்கிறது.இது ஓரளவு பயன் தருகிறது.

அதேநேரம் அரசு ஊழியர்களை தவிர மற்றவர்களுக்கு நிலையான ஓய்வூதியம் என்பது இன்று வரை கிடைப்பது இல்லை.. ஏனெனில் அரசு ஊழியர்களை போல் தனியாரில் வேலை செய்யும் மக்களுக்கு வேலை நிரந்தரமாக இருப்பதில்லை.. எனினும் அவர்கள் ஓய்வூதியம் வேண்டும் என்றால், பிஎப்பில் பணம் போட வேண்டும். அவர்களுக்கு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு பிறகு ஓய்வூதியம் கிடைக்கும். அதேபோல் வேறு சில ஓய்வூதிய திட்டங்களும் உள்ளன.
இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், நாட்டில் தற்போது மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டப்படி அரசு பணியாளர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான வாய்ப்பை ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (பிஎப்) வழங்குகிறது. இத்திட்டத்தில், பணியாளர் மற்றும் பணி வழங்கும் நிறுவனம் ஆகிய இரு தரப்பின் பங்களிப்பு இருக்கிறது. அரசுக்கு இதில் எந்த பங்களிப்பும் கிடையாது.
அடுத்ததாக கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் அடல் ஓய்வூதியத் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இத்திட்டங்களில் முதலீட்டாளர் 60 வயதை எட்டிய பிறகு மாதந்தோறும் ரூ.1,000 - ரூ.1,500 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இதேபோல், வீதிகளில் பொருட்களை விற்பவர்கள், தினக்கூலிகள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்காக பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் (PM-SYM) திட்டமும், விவசாய தொழிலாளர்களுக்கு பிரதான் மந்திரி கிசான் மந்தன் திட்டமும் நடைமுறையில் இருக்கிறது.
இந்நிலையில், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், முறைசாரா தொழிலாளர்கள் என நாட்டு மக்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் அதிகாரிகள் வட்டாரங்கள் சொல்கின்றன. ஏற்கனவே உள்ள சில ஓய்வூதிய திட்டங்களை இணைத்து ஓய்வூதிய கட்டமைப்பை நெறிப்படுத்த அரசு திட்டமிட்டமிட்டு வருகிறதாம்.
அரசின் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில், நாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் விருப்பப்படி இணைந்து கொள்ள முடியும். இத்திட்டம் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 'புதிய ஓய்வூதியத் திட்டம்' என்று இப்போதைக்கு அழைக்கப்படும் என்றும், அதேநேரம் தற்போது உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும், ஒரு தன்னார்வ ஓய்வூதியத் திட்டமாக இந்த புதிய திட்டம் இருக்கும் என்றும் சொல்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள். இந்தத் திட்டம் தொடர்பாக இறுதி முடிவுக்கு பிறகு அரசு விரிவான அறிவிப்பாணை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications