சசிகலா புஷ்பாவின் 'சந்திப்பு ' போட்டோக்கள் -பேஸ்புக்கில் இருந்து நீக்க கூடாது- டெல்லி கோர்ட் அதிரடி
டெல்லி: சசிகலா புஷ்பா மக்களின் பிரதிநிதி என்பதால் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அவர் யாரை எல்லாம் சந்திக்கிறார் என்பதை அறிந்து கொள்ள மக்களுக்கும் உரிமை உண்டு என டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சசிகலா புஷ்பா ரூ2 லட்சம் பணம் தரவும் டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த சசிகலா தற்போது பாஜகவில் இணைந்தும் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா புஷ்பா தொடர்பான பல்வேறு படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

டெல்லி கோர்ட்டில் வழக்கு
இந்த படங்கள் தமக்கு களங்கம் ஏற்படுத்துகின்றன; திட்டமிட்ட உள்நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதனால் இவற்றை நீக்க வேண்டும் என்பது சசிகலா புஷ்பாவின் வழக்கு. டெல்லி உயர்நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பாவின் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஹாய் என்ட்லா பிறப்பித்திருக்கும் உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

எது அந்தரங்கம்?
மனுதாரர் சசிகலா புஷ்பாவின் அந்தரங்க உரிமை எது? மக்கள் பிரதிநிதியாக அவர் யாரை எல்லாம் சந்திக்கிறார்? அதை அறியும் மக்களுக்கான உரிமை- இவை இரண்டையும் அலசி ஆராய வேண்டியது உள்ளது. சசிகலா புஷ்பா மக்களின் பிரதிநிதியாக கருதப்படுகிறவர். அவர் சார்ந்த கட்சியை சேராத நபர்களை சந்தித்திருக்கிறார்.

மூடிய கதவுக்குப் பின் சந்திப்பு
எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆண் ஒருவருடன் மூடிய கதவுகளுக்குப் பின் சசிகலா புஷ்பா சந்தித்து பழகியதை அறிந்து கொள்ளக் கூடிய உரிமை பொதுமக்களுக்கும் உண்டு. இதை பொது வெளியில் சசிகலா புஷ்பா மறைக்கலாம் என விரும்புவது பொதுநலன் என்பதாகவும் கருதிவிட முடியாது. இந்த சந்திப்பு பொதுநலனுக்கானது எனவும் சசிகலா தரப்பு வாதிடவும் இல்லை.

சசிகலா புஷ்பா மனு டிஸ்மிஸ்
இதனால் சசிகலா புஷ்பா தொடர்பான படங்களை நீக்க அல்லது பார்ப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது முடியாது. இதற்கான உத்தரவை ஃபேஸ்புக், கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு பிறப்பிக்கவும் இயலாது. சசிகலா புஷ்பா தாக்கல் செய்த வழக்கும் தள்ளுபடி செய்யப்படுகிறது. சசிகலா புஷ்பா, ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ2 லட்சம்; கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு ரூ1 லட்சம் தர வேண்டும். இவ்வாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications