கொரோனா வந்து குணமடைந்த பின்.. இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்கா? உடனே டாக்டரை பாருங்க!
டெல்லி: கொரோனா ஏற்பட்டு குணமடைந்த நபர்களுக்கு சில நாட்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில முக்கியமான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் புதிய கொரோனா கேஸ்கள் 25 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. தினசரி கேஸ்கள் பெரிய அளவில் உயரவில்லை என்றாலும் கூட விரைவில் மூன்றாம் அலை இந்தியாவில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி, பிப்ரவரியில் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவில் 2,45,683 ஆக்டிவ் கேஸ்கள் தற்போது உள்ளன.
இந்த நிலையில்தான் கொரோனா வந்து குணமடைந்தவர்கள் சில வாரங்களுக்கு தங்கள் உடல்நிலை குறித்து கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு அறிகுறியையும் கவனமாக அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அறிவுரை
பரிதாபாத்தை சேர்ந்த பிரபல மருத்துவர் ராகேஷ் ராய் சாப்ரா, பெங்களூர் சேர்ந்த மருத்துவர் ராகேஷ் சிங் ஆகியோர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா நோயாளிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்பும் சில நீண்ட கால பாதிப்புகள் இருக்கலாம். இது தொடர்பாக பலர் தங்களுக்கு மூச்சு விட முடியவில்லை. படபடப்பாக இருக்கிறது. சுவாசிப்பதில் சிக்கல் இருக்கிறது என்று கூறி உள்ளன.

மூச்சு திணறல்
மூச்சு திணறல், வேகமான இதய துடிப்பு, படபடப்பு ஆகியவை இருந்தால் கொரோனா நோயில் இருந்து குணமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். கொரோனாவில் இருந்து குணமடைந்த பலருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு இந்த பாதிப்பு சில நாட்களில் சரியாகிவிடும். அதே சமயம் சிலருக்கு இந்த பாதிப்பு நீண்ட நாட்களுக்கு தொடரும் வாய்ப்புகள் உள்ளன.

மரத்து போகும் பிரச்சனை
அதேபோல் சில நோயாளிகளுக்கு உடல் மரத்து போகும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ரத்த கட்ட பிரச்சனை காரணமாக இப்படி உடல் மரத்து போகும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கொரோனாவில் இருந்து குணமடைந்த சிலருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாக ரத்த கட்டு பிரச்சனை மாரடைப்பு, மூளை அட்டாக் ஆகியவற்றை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.

மாரடைப்பு
சரியான ரத்த ஓட்டம் ஏற்படாமல் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. போதுமான ஆக்சிஜன் செல்லாத காரணத்தால் மாரடைப்பு, இருதயம் செயல் இழக்கும் வாய்ப்புகளும் உள்ளன. கை, கால்களில் நீண்ட காலத்திற்கு ரத்த கட்டு ஏற்படும் பிரச்சனைகளும் உள்ளன. கொரோனா உச்சத்தில் இருக்கும் போதும், குணமடைந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கும் இந்த பிரச்சனை இருக்க வாய்ப்புகள் உள்ளன.

ரத்த ஓட்டம்
மற்ற கிட்னி பிரச்சனை, சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு டி டிமர் போன்ற சோதனைகளை மேற்கொள்வோம். பலருக்கு பிளட் தின்னர் மருந்துகளை அளிக்கிறோம். பொதுவாக கொரோனாவில் இருந்து குணமடைந்த பின் இதுபோன்ற சுவாச பிரச்சனை இருப்பவர்கள், உடலில் ரத்த கட்டு பிரச்சனை இருப்பவர்கள் வீட்டில் சிகிச்சை எடுக்கமால் உடனடியாக மருத்துவர்களை காண்பது பலன் அளிக்கும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications