"3 இடியட்ஸாக" மாறிய இளைஞர்.. ஓடும் ரயிலில் சால்வை நூல், பிளேடை வைத்து பிரசவம் பார்த்து அசத்தல்
டெல்லி: டெல்லியில் ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த ஒருவருக்கு மாற்றுத்திறனாளி லேப் டெக்னீசியன் ஒருவர் வீடியோ கால் மூலம் மருத்துவரின் அறிவுரையின் படி பிரசவம் பார்த்த சம்பவம் சினிமா காட்சிகளை கண் முன் கொண்டு வருகிறது.
ரயிலில், பேருந்தில் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு யாரும் உதவ முன் வராத நிலையில் யாராவது ஆண் ஒருவர் உதவுவது போன்று காட்சிகள் சினிமா படங்களில் அமையும். அது போன்ற ஒரு காட்சி நண்பன் படத்தில் இடம்பெற்றிருந்தது.
கொட்டும் மழையில் அனுயாவுக்கு பிரசவ வலி வந்துவிடும். அப்போது விஜய் தனது காதலியான இலியானாவிடம் வீடியோ கால மூலம் கேட்டு அனுயாவுக்கு பிரசவம் பார்ப்பார். அது போல் நிஜத்தில் ஒரு காட்சி டெல்லியில் ரயிலில் நடந்துள்ளது.
லேப் டெக்னீசியன்
டெல்லியிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு செல்கிறது சம்பர்கிராந்தி கோவிட் 19 சிறப்பு விரைவு ரயில். இந்த ரயிலில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பிரசவ வலியால் துடித்தார். அங்கு பெண்கள் யாரும் இல்லாததால் அந்த பெட்டியில் பயணம் செய்த பிரஜாபதி என்ற லேப் டெக்னீசியன் ஓடி சென்று பார்த்தார்.
போர்வை
அப்போது தனக்கு தெரிந்த கண் டாக்டர் ஒருவருக்கு வீடியோ கால் போட்டு நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அப்போது அவர் தான் கூறுவது போல் பிரசவம் பாருங்கள் என சொல்லியுள்ளார். அதன்படி தான் குளிருக்கும் போர்த்தி கொண்டிருந்த சால்வையின் நூல் மற்றும் புதிய பிளேட்டை வைத்திருந்தார்.
குழந்தை
அதை வைத்து அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். அதற்குள் மதுரா ரயில் நிலையம் வந்தவுடன் அங்கு தயார் நிலையில் இருந்த போலீஸார், பெண்ணையும் குழந்தையையும் அழைத்து சென்றனர்.
பிரஜாபதிக்கு பாராட்டுகள்
பிரசவித்த பெண்ணின் பெயர் கிரண். இவருக்கு ஏற்கெனவே 3 முறை கருகலைப்பு நடந்துள்ளது. பிரஜாபதி வட டெல்லி ரயில் பிரிவு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரை ரயிலில் இருந்தவர்கள் பாராட்டினார்கள். பிரஜாபதிக்கு விரைவில் திருமணம் நடைபெற போகிறது குறிப்பிடத்தக்கது.