இந்த வகை நாய் வளர்ப்பதையே தடை பண்ணுங்க.. பிட்புலுக்கு எதிராக லெட்டர் போட்ட பீட்டா! என்னாச்சு
டெல்லி: பிட்புல் இன நாய்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக பீட்டா அமைப்பு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
உலகில் அதிகப்படியான மக்களால் விரும்பி வளர்க்கப்படும் செல்ல பிராணிகளில் ஒன்றாக நாய் உள்ளது. பல கோடி பேர் நாயை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாகவே கருதி வளர்க்கின்றனர்.
இருப்பினும், பல சமயங்களில் நாய்களால் அக்கம்பக்கத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம். அதிலும் ஆக்ரோஷ குணம் கொண்ட நாய் வகைகளை வளர்ப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும்.
சாலையோரம் நடந்து சென்ற பெண்ணை கடித்து குதறிய ''பிட்புல் நாய்''.. ஆஸ்பத்திரியில் அட்மிட்.. என்னாச்சு!
பிட்புல் தாக்குதல்
இதனிடையே இந்தியாவில் சமீப காலமாக பிட்புல் இன நாய்களின் தாக்குதல் அதிகரித்து இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசம் கைசர்பாக் பகுதியைச் சேர்ந்த 82 வயது முதியவர் சுசீலா திரிபாதி என்பவரை அவரது வீட்டிலேயே வளர்த்து வந்த பிட்புல் நாய் கடித்துக் கொன்றது. அதேபோல பஞ்சாபில் செல்ல பிராணியாக வளர்க்கப்பட்ட பிட்புல் நாய் 13 வயது சிறுவனின் காதை கடித்துத் துப்பியது.
அதிர்ச்சி
இது பிட்புல் இன நாயை வைத்திருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பீட்டா அமைப்பை புதியதொரு கோரிக்கையை வைத்துள்ளது. பிட்புல் இன நாய்களை வளர்ப்பதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கக்கோரி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர். அதாவது சட்ட விரோத சண்டைகளுக்கு நாய்களின் வளர்ப்பைத் தடை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடை வேண்டும்
சட்ட விரோத சண்டைகளுக்கு வளர்க்கப்படும் பிட்புல் இன நாய்களுக்கு உடனடியாக கருத்தடை செய்ய வேண்டும் என்றும் இதன் மூலம் சட்டவிரோத இனப்பெருக்கத்தால் அதிக ஆக்ரோஷம் கொண்ட நாய்கள் பிறப்பது தடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும், இதுபோன்ற நாய்கள் விற்பனை, இனப்பெருக்கம் தொடர்பாக மத்திய அரசு உரிய வழிமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
காரணம்
உத்தரப் பிரதேச அரசு ஏற்கனவே பிட்புல், ராட்வீலர் மற்றும் மாஸ்டிஃப் இன நாய்களைத் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பீட்டா இந்தியாவின் மூத்த நிர்வாகி நிதின் கிருஷ்ணகவுடா கூறுகையில், "இந்தத் தாக்குதல்கள் எல்லாம் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. மனிதர்கள் பேராசைக்காகச் சட்ட விரோதமாக நாய்கள் சண்டையை நடத்தவே இப்படி வளர்க்கிறார்கள் இதை உடனடியாக தடை செய்ய வேண்டும்" என்றார்.
பிட்புல்
மற்ற நாய் இனங்கள் உடன் ஒப்பிடுகையில் பிட்புல் நாய் புதிய வகையாகும். 'பிட்புல்' என்ற சொல்லே முதலில் 1927இல் தான் பயன்படுத்தப்பட்டது. இதில் அமெரிக்கன் பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்லி, ஸ்டாஃபோர்ட்ஷைர் புல்டெரியர். அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர் என 4 வகைகள் உள்ளன. பிட்புல் வகைகள் சற்றே ஆவேசமானது தான். ஆனால், அவை மனிதர்களைத் தாக்குவது மிகவும் அரிதான நிகழ்வு என்கிறார்கள் விலங்கு மருத்துவர்கள்.
என்ன காரணம்
இந்தியாவில் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்ட விரோதமாக நாய்களைச் சண்டைக்கு விடும் முறை இருக்கிறது. இப்படி பிட்புல் நாய்கள் சண்டைக்காக வளர்க்கப்பட்டால், அதன் ரத்தத்தில் ஆக்ரோஷமான பண்புகள் வந்துவிடும். இந்த நாய்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டால், அதன் குட்டிகளுக்கும் அதே ஆக்ரோஷமான குணம் இருக்கும். இது மனிதர்கள் அல்லது பிற விலங்குகளால் எந்தவொரு செயலாலும் தூண்டப்படலாம். எனவே, இதுபோன்ற நாய் இனங்களை வாங்கும் முன், அதன் பின்னணியைக் கவனமாக செக் செய்ய வேண்டும் விலங்கு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.