பிஎம் கேர் நிதி.. 5 நாளில் ரூ. 3076 கோடி. கொடுத்தது யார் யார்.. டீட்டெய்ல் கேட்கும் ப.சிதம்பரம்!
டெல்லி: பிஎம் கேர்ஸ் நிவாரண நிதிக்கு ஐந்தே நாட்களில் 3,076 ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. ஆனால், யாரிடம் இருந்து பெறப்பட்டது என்பது குறித்த தகவல்களும் அவர்களது பெயரும் வெளியாகவில்லை ஏன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி குறித்த தணிக்கையில், கடந்த மார்ச் 27 ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை கிடைத்த நன்கொடை குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 2.25 லட்சம் நிதியுடன் பிஎம் கேர்ஸ் துவங்கப்பட்டது. இந்தியாவில் இருந்து 3,075.85 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளது. இதில் வெறும் 39.67 கோடி ரூபாய்தான் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்டது. இதற்கு ரூ. 35 லட்சம் வட்டியும் கிடைத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து பணம் பெற்ற வகையில் சேவை வரியாக 2,049 ரூபாய் செலுத்தப்பட்டு இருக்கிறது என்றும், மீதம் மார்ச் 31ஆம் தேதி வாக்கில் 3076.62 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நன்கொடை கொடுத்தவர்களின் பெயரை வெளியிடவில்லை.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஏன் நன்கொடையாளர்களின் பெயரை வெளியிடவில்லை என்று கேட்டுள்ளார். அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் டிரஸ்ட்கள் நன்கொடையாளர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு கடமைபட்டவர்கள். ஏன் பிஎம் கேர்ஸ் மட்டும் இந்தக் கடமையில் இருந்து தவறுகிறது. பெயர்கள் கண்டிப்பாக தெரிந்து இருக்கும். ஏன் பெயர்களை வெளியிடுவதற்கு பயப்பட வேண்டும்.
இந்த 5 மாநிலங்கள்தான் ரொம்ப டென்ஷனை கொடுக்குது.. மொத்தம் 56% நோயாளிகள்.. கவலையா இருக்கு!
பிஎம் கேர்ஸ் அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது. கார்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் அனுமதி கொடுத்ததா?இல்லையென்றால் யார் அனுமதி கொடுத்தது? மத்திய அரசு இந்த நிதியை அமைக்கவில்லை என்றால், ஏன் மத்திய அமைச்சர்கள் மூவர் இதற்கு டிரஸ்ட்களாக இருக்கின்றனர். இவர்களை யார் டிரஸ்ட்களாக நியமித்தனர். அனைத்து வகையான கண்காணிப்பில் இருந்தும் பிஎம் கேர்ஸ் நிதியை மத்திய அரசு பாதுகாக்கிறது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைமை கணக்கு தணிக்கையாளர் பிஎம் கேர்ஸ் நிதியை தணிக்கை செய்யமாட்டார்கள் என்று பிரதமர் அலுவலகம் ஏப்ரல் மாதம் தெரிவித்து இருந்தது. அப்போது இருந்தே இந்த நிதி தனிப்பட்ட நிதியாகவும், பொது நிதியாகவும் கருதப்படாது என்று கூறப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக இந்த நன்கொடை வாங்கப்பட்டது.
அரசு பொதுத்துறை நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் ஆகியவை சேர்ந்து ரூ. 2000 கோடி வரை நிதி அளித்து இருந்தது. பிஎம் கேர்ஸ் நிதிக்கு பிரதமர் தலைவராகவும், டிரஸ்ட் உறுப்பினர்களாக பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுவரை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வெறும் ரூ. 3,100 கோடி மட்டுமே வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு மே 31ஆம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் கொரோனாவுக்காக 500 சிறப்பு படுக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்து இருந்தது.
பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு மாற்றுவதற்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.