மக்கள் பார்க்கிறார்கள்.. நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்.. பிரதமர் வேண்டுகோள்!
டெல்லி: இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஏராளமான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குளிர்கால கூட்டத் தொடரின்போது இளைஞர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையின்மைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். ஆனால் பதாகைகளை ஏந்த அனுமதி இல்லை என்று கூறி அந்த எம்பிக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இப்படியாக மக்களவையில் 100 எம்பிக்களையும், மாநிலங்களவையில் 46 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு எம்பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது.
இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது. எனவே இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த வேண்டும் என்பது குறித்து நேற்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டில் பெண் சக்திகளின் திருவிழா நடைபெறுகிறது. நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தும் வகையில் இருக்க கூடாது. நாடாளுமன்ற விவாதங்கள் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. நாளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.












Click it and Unblock the Notifications