மிசா கொடுமை- திமுக போலவே பேசும் பாஜக- மன்கிபாத் நிகழ்ச்சியில் எமர்ஜென்சி சித்ரவதைகள் பற்றி மோடி!
டெல்லி: 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சி எனும் அவசர நிலை பிரகடன காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட சித்ரவதைகள் குறித்து பிரதமர் மோடி இன்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் விவரித்தார்.
மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது: பாரத நாடு மக்களாட்சியின் தாய். நாம் நமது மக்களாட்சி முறையின் ஆதர்சங்களை தலையானதாகக் கருதுகிறோம், நமது அரசமைப்புச் சட்டத்தை தலையாயது என்று கருதுகிறோம் என்பதால், நாம் ஜூன் மாதம் 25ஆம் தேதியையும் மறந்து விடக் கூடாது. இந்த நாளன்று தான் நமது தேசத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இது பாரத நாட்டு வரலாற்றிலே ஒரு கருப்பு அத்தியாயம்.

எமர்ஜென்சி: இலட்சக்கணக்கானோர் இந்த அவசரநிலையைத் தங்கள் முழுச்சக்தியோடு எதிர்த்தார்கள். மக்களாட்சியின் ஆதரவாளர்களின் மீது இந்தக் காலகட்டத்தில் எந்த அளவுக்குக் கொடுமைகளும், அநீதிகளும், சித்திரவதைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன, எத்தனை துன்பங்களுக்கு அவர்கள் ஆளானார்கள் என்பதை நினைக்கும் போது இன்றும் கூட மனம் கொந்தளிக்கிறது. இந்தக் கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மீது பல புத்தகங்கள் எழுதப்பட்டுவிட்டன.
சித்ரவதைகள் குறித்த புத்தகம்: சங்கர்ஷ் மேன் குஜராத், அதாவது போராட்டத்தில் குஜராத் என்ற புத்தகத்தை எழுதக்கூடிய வாய்ப்பு அந்தக் காலத்தில் கிடைத்தது. சில நாட்கள் முன்னர் தான் அவசர நிலை மீது எழுதப்பட்ட மேலும் ஒரு புத்தகம் என் பார்வையில் பட்டது. இதன் தலைப்பு, Torture of Political Prisoners in India, அதாவது இந்தியாவில் அரசியல் கைதிகளின் சித்திரவதை. அவசரநிலையின் போது வெளிவந்த இந்தப் புத்தகத்திலே, எப்படி, அந்தக் காலத்தைய அரசு, ஜனநாயகக் காப்பாளர்களிடத்திலே எத்தனை கொடூரமாக நடந்து கொண்டது என்பது விபரமாக விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திலே ஏராளமான விசயங்களின் ஆய்வுகளும், நிறைய படங்களும் இருக்கின்றன. இன்று நாம் சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த வேளையில், தேசத்தின் சுதந்திரத்தையே ஆபத்துக்குள்ளாக்கிய இத்தகைய குற்றங்கள் குறித்து ஒரு மீள்பார்வை பார்க்க வேண்டும். இதன் மூலம், இன்றைய இளைய தலைமுறையினரால் ஜனநாயகத்தின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications