உலகை அச்சுறுத்தும் ஓமைக்ரான் வைரஸ்- உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
டெல்லி: நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசிகள் இருப்பு, புதிய உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஆகியவை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஒரு வார காலமாக உலக நாடுகளை B.1.1.529 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் - ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட இந்த B.1.1.529 உருமாறிய ஓமைக்ரான் கொரோனா வைரஸ், டெல்டா வைரஸைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்கின்றனர் வல்லுநர்கள். தென்னாப்பிரிக்கா, போஸ்ட்வானா, சீனா, இஸ்ரேல், பெல்ஜியம் என இந்த உலகை அச்சுறுத்தும் ஓமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இது 50 முறை உருமாற்றம் அடைந்த வைரஸாக சுட்டிக் காட்டுகின்றனர் வல்லுநர்கள்.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இத்தனைக்கும் தென்னாப்பிரிக்காவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களையும் ஓமைக்ரான் வைரஸ் பாதித்திருக்கிறது. இதனால் மத்திய அரசு புதிய பயணக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனமும் ஓமைக்ரான் வைரஸ் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என எச்சரித்திருக்கிறது.

பயண கட்டுப்பாடுகள்
இதனால் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழியாக வருவோருக்கு உரிய பரிசோதனை நடத்த வேண்டும் என்று மாநிலங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருவோருக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மொத்தம் 12 நாடுகளிலிருந்து வருவோருக்கான பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

கெஜ்ரிவால் கோரிக்கை
இதனிடையே ஓமைக்ரான் வைரஸ் பரவி வரும் நாடுகளுடனான விமான சேவைகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், கொரோனாவில் இருந்து நமது நாடு மீண்டு வரும் நிலையில் புதிய ஒமிக்ரான் வைரஸ் நமது நாட்டுக்குள் நுழையாமல் இருக்க விமான சேவைகளை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
Recommended Video

பிரதமர் மோடி ஆலோசனை
இந்த நிலையில் பிரதமர் மோடி டெல்லியில் உயர் அதிகாரிகளுடன் கொரோனா பாதிப்பு நிலவரம், கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேபினட் செயலாளர் ராஜீவ் கெளபா,.பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் பங்கேற்றனர். புதிய உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் மூலமான பாதிப்புகள், தாக்கங்கள் குறித்தும் பிரதமர் மோடி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications