வாஜ்பாய்க்கு சின்னப்பிள்ளை.. மோடிக்கு கோவை பாப்பம்மாள்.. மூதாட்டி காலில் விழுந்த பிரதமர்! யார் இவர்?
பிரதமர் மோடி, தமிழ்நாட்டைச் சேர்ந்த மூதாட்டியின் காலில் விழுந்தார்
டெல்லி : முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்தது போல, கோவை பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சிறுதானியங்கள் மாநாட்டில் விவசாய பிரதிநிதிகள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரநிதிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 107 வயது மூதாட்டி பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

பிரதமர் மோடி
டெல்லியில் உள்ள பூசாவில் சர்வதேச சிறுதானியங்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு தபால் தலையையும், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ நாணயத்தையும் வெளியிட்டார். மேலும், உணவுத் தட்டுப்பாடு அதிகம் உள்ள கயானா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்புடன் சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்கான ஸ்ரீஅன்னம் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூதாட்டி காலில்
பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை இந்தியா முன்னெடுத்துச் செல்வதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார். மேலும் உலக சிறுதானியங்கள் மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 107 வயது மூதாட்டி பத்மஸ்ரீ பாப்பம்மாளின் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர் அவருடன் இயற்கை விவசாயம் பற்றிப் பேசினார்.

யார் இந்த பாப்பம்மாள்
தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 107 வயது மூதாட்டியான பாப்பம்மாள் இன்று வரை தொடர்ந்து ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருகிறார். அவரது இந்த ஈடுபாட்டையும், சாதனையையும் பாரட்டி அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. 107 வயது மூதாட்டியான பாப்பம்மாள் காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார் பிரதமர் மோடி.

மூதாட்டி நெகிழ்ச்சி
பிரதமர் தனது காலில் விழுந்து ஆசி பெற்றது குறித்துப் பேசிய பாப்பம்மாள், "டெல்லியில் மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன். அவர் பதிலுக்கு எனது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டார். திடீரென பிரதமர் மோடி காலில் விழுவார் என நான் எதிர்பார்க்க வில்லை." எனத் தெரிவித்துள்ளார்.

அன்றும் - இன்றும்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1999ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்தபோது மூதாட்டி சின்னப்பிள்ளை கால்களில் விழுந்து வணங்கினார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பிள்ளை, சுய உதவிக் குழு தொடங்கி ஊரகப் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார். அவருக்கு விருது வழங்கியபோதுதான் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்நிலையில் மற்றொரு தமிழ்நாட்டு மூதாட்டியின் காலில் விழுந்து வணங்கியுள்ளார் இன்றைய பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications