அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு.. INDIAக்கு போட்டியாக NDAக்கு மோடி புது விளக்கம் - நீங்களே பாருங்க
டெல்லி: எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டத்துக்கு போட்டியாக இன்றே டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜக கூட்டியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் வைத்துள்ள INDIA என்ற பெயருக்கு போட்டியாக NDA வுக்கு புதிய விளக்கம் கொடுத்து இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் 2 வது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து போட்டியிடுவது முடிவு செய்யப்பட்டு கூட்டணியின் பெயர் இந்தியா என்று பெயரிடப்பட்டு உள்ளது. அதாவது Indian National Developmental Inclusive Alliance என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த பெயரை அறிவித்த உடனே மக்கள் மத்தியில் பலத்தை வரவேற்பை பெறத் தொடங்கியதுடன் ஊடகங்களை இந்தியா என்ற கூட்டணியின் பெயர் ஆக்கிரமித்து இருக்கிறது. மறுபக்கம் எதிர்க்கட்சிகளின் பெங்களூரு கூட்டம் நிறைவடைந்தவுடன் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் தொடங்கியது.
அதிமுக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), என்சிபி (அஜித் பவார்) என 39 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நேர்மறையான வளர்ச்சியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பார்க்கிறது. எதிர்மறையான அரசியலை செய்யும் கூட்டணி வீழ்த்தப்படும்.
நாம் உள்நாட்டு பிரச்சனைகளில் வெளிநாட்டு சக்திகளை தலையிட வைக்கவில்லை. இந்த என்.டி.ஏ. கூட்டணி கட்டாயத்தின் பேரில் உருவாகவில்லை. மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதற்காக உருவானது. அவரவரின் உழைப்புக்கான புகழ், பாராட்டு சமமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நாட்டுக்கும், முன்னேற்றத்துக்கும், மக்களுக்கும் அதிகாரமளிப்பதே என்டிஏவின் முதல் நோக்கம்.
இந்தியா மீதுள்ள நம்பிக்கையால் மற்ற நாடுகள் நம்முடன் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன. நிலையான அரசாங்கம் அமைந்து உள்ளதால் இந்தியாவை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. யுபிஏ ஆட்சிகாலத்தில் ஏழைகளின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதை என்.டி.ஏ. அரசு தடுத்து நிறுத்தி உள்ளது.
அரசியல் ரீதியாக எதிரணியில் உள்ளவர்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கி என்.டி.ஏ. கவுரவித்தது. பாதுகாப்புத் துறை தொடங்கி சுரங்கத் துறை வரை அனைத்து துறைகளிலும் பெண்களை தலைமையாக கொண்டு வளர்ச்சியடைவதறான வழிகளை என்.டி.ஏ. திறந்துவிட்டு உள்ளது. 90 களில் கூட்டணிகளின் மூலமாகவே நாட்டை நிலையற்றதாக்கி வந்தது காங்கிரஸ். ஆட்சியமைத்து கவிழ்த்து வந்தது.

நாட்டு மக்களை என்.டி.ஏ. ஒன்று திரட்டுகிறது. நாட்டு மக்களை எதிர்க்கட்சிகள் பிளவுபடுத்துகின்றனர். என்.டி.ஏ.வின் வாக்கு சதவீதம் 2024 மக்களவைத் தேர்தலில் 50% ஐ தாண்டும். நான் தவறுகளை செய்வேன். ஆனால், கெட்ட எண்ணத்தில் செய்தது இல்லை. என்.டி.ஏ. என்றால் இனி NEW INDIA (புதிய இந்தியா), DEVELOPED NATION (வளர்ந்த நாடு), ASPIRATIONS OF PEOPLE (மக்கள் மற்றும் பிராந்திய விருப்பம்)." என்று விளக்கமளித்து உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்து டிரெண்ட் ஆன நிலையில் அதற்கு போட்டியாக பிரதமர் நரேந்திர மோடி NATIONAL DEMOCRATIC ALLIANCE (NDA) என்ற கூட்டணியின் பெயருக்கு புதிய விரிவாக்கத்தை மோடி கொடுத்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications