''கொரோனாவில் இருந்து கிராமங்களை காப்பாற்றணும்''.. கலெக்டர்களுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
டெல்லி: கிராமங்களில் தொற்று பரவாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் 2-வது அலை மக்களின் நிம்மதியை குலைத்து வருகிறது.
ஆறுதல் அளிக்கும் படியாக கடந்த சில தினங்களாக சற்று தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் சில மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
பிரதமர் ஆலோசனை
இந்த நிலையில் அதிக தொற்று பாதிப்புள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தமிழத்தில் கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களும்,, அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
களத் தளபதிகள் இவர்கள்தான்
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளை "களத் தளபதிகள்" என்று வர்ணித்தார். கிராமப் பகுதி அளவில் கட்டுப்பாட்டு மண்டலங்கள், தீவிரமான, விரைவான பரிசோதனை மற்றும் கொரோனா தொடர்பான சரியான மற்றும் முழுமையான தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வது ஆகியவை தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கான ஆயுதங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
தடுப்பூசி விநியோகம் அதிகரிப்பு
கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தை பெரிய அளவில் அதிகரிக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசி முறையையும், செயல்முறையையும் சுகாதார அமைச்சகம் நெறிப்படுத்துகிறது. அடுத்த 15 நாட்களுக்கு ஒரு கால அட்டவணையை மாநிலங்களுக்கு முன்கூட்டியே வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று மோடி தெரிவித்தார்.
கிராமம் முக்கியம்
பி.எம் கேர்ஸ் நிதி மூலம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவ விரைவான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதில் பல ஆலைகள் ஏற்கனவே பல அலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார். கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மெத்தனம் கூடாது
தற்போது, சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாதிப்புகள் குறைந்து வருவதால் மெத்தனமாக இருந்து விடக்கூடாது. நாம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே நமது போராட்டம். இதையே கடந்த வருடத்தில் நடைபெற்ற கூட்டங்களில் நான் வலியுறுத்தி வருகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.