பிரமாண்டம்.. உலகில் மிகப்பெரிய ஆற்றுவழி சொகுசு கப்பலை துவக்கிய பிரதமர் மோடி..வாய்பிளக்கும் வசதிகள்
டெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சொந்த தொகுதியான வாரணாசியில் உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பல் ‛கங்கா விலாஸ்' சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று துவக்கி வைத்தார். இந்த கப்பல் இந்தியா-வங்தேசம் இடையே 27 ஆறுகளை கடந்து 51 நாள் பயணம் செய்ய உள்ளது. ஸ்பா, சலூன், ஜிம் உள்பட பல்வேறு சொகு வசதிகளுடன் கூடிய இந்த கப்பலில் ஒருநாள் பயணத்துக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும், கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் 51 நாள் பயணத்துக்கு ஒருவருக்கு ரூ.20 லட்சம் வரை செலவாகுமாம். முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலில் உள்ள சிறப்பம்சங்கள் ‛வாவ்' சொல்லும் வகையில் வியக்க வைக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். இந்நிலையில் தான் ரூ.1000 கோடி மதிப்பிலான பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்ததோடு, அடிக்கல்லும் நாட்டினார். இதில் முக்கியமான திட்டம் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணாசியில் செயல்படுத்தப்படும் 2 திட்டங்களாகும்.

சொகுசு கப்பல் திட்டம்
இதில் ஒன்று வாரணாசியில் கூடார நகரம் திறப்பது. 2வது உலகின் மிகப்பெரிய ஆற்றுவழி சொகுசு கப்பல் சேவையை வாரணாசி கங்கை ஆற்றில் துவக்கி வைப்பது. அதன்படி இந்த 2 திட்டங்கள் உள்பட ரூ.1000 கோடி திட்டங்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் திட்டமாக உலகின் மிகப்பெரிய ஆற்றுவழி சொகுசு கப்பல் திட்டம் உள்ளது. இது எதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? என்பது பற்றிய பல்வேறு முக்கிய விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் முழுவிபரம் வருமாறு:

உலகின் மிகப்பெரிய ஆற்றுவழி சொகுசு கப்பல்
பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகின் மிக நீளமான ஆற்றுவழி பயணத்தை மேற்கொள்ளும் சொகுசு கப்பல் ‛கங்கா விலாஸ்' சேவையை துவக்கி வைத்துள்ளார். இந்த கப்பலை இந்தியாவே தயாரித்துள்ளது. மொத்தம் ரூ.68 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து இந்த சொகுசு கப்பல் இயங்க தொடங்கியது. இந்த கப்பல் இந்தியா-வங்காளதேசம் இடையே இயங்க உள்ளார். வாரணாசியில் இருந்து 51 நாட்களில் 3,200 கிமீ பயணித்து அசாமின் திப்ரூகர் வழியாக வங்கதேசத்தை இந்த சொகுசு கப்பல் அடையும். அதன்படி இந்த கப்பல் மார்ச் 1ம் தேதி வங்கதேசத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

27 ஆறுகளை கடந்து..
இந்த பயணத்தின்போது இந்தியா, வங்காளதேசத்தில் 27 ஆறுகளை கங்கா விலாஸ் சொகுசு கப்பல் கடக்கும். கப்பலில் பயணம் செய்வதன் மூலம் இந்தியா, வங்காளதேசத்தின் 50க்கும் அதிகமான இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம். குறிப்பாக கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், தேசிய பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் இதில் அடங்கும்.

3 அடுக்குகளில் 18 அறைகள்
மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் Antara Luxury River Cruises நிறுவனம் சார்பில் இந்த கப்பல் இயக்கப்பட உள்ளது. 62 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் இந்த கப்பல் உள்ளது. மொத்தம் 3 அடுக்குகளில் மொத்தம் 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில் 36 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். முதற்கட்டமாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த 36 பயணிகள் பயணம் செய்கின்றனர். இதுதவிர 40 பணியாளர்கள் தங்கும் வசதி உள்ளது. கங்கா விலாஸ் சொகுசு கப்பலில் ஸ்பா, சலூன், ஜிம் உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளது.

கட்டணம் எவ்வளவு?
கப்பலில் நீண்டநாள் மற்றும் சிறிய தூரம் என 2 வகைகளில் மக்கள் பயணிக்கலாம். அதன்படி ஒருநாள் பயணத்துக்கு குறைவாக என்றால் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை செலவாகும். 51 நாள் பயணத்துக்கு ரூ.20 லட்சம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஆண்டுக்கு 6 பயணங்களை மேற்கொள்ள உள்ளது என சொகுசு கப்பலின் இயக்குனர் ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சைவ உணவு மட்டுமே...
இந்த சொகுசு கப்பல் வாரணாசியின் கங்கை நதியில் இருந்து பயணத்தை துவக்கி புத்த மதத் தலமான சாரநாத் செல்லும். அதன்பிறகு தாந்த்ரீக கலைக்கு பெயர் பெற்ற மயோங், அசாமின் மிகப்பெரிய நதி தீவான வைஷ்ணவ கலாச்சாரத்தின் மையமாக உள்ள மஜூலி, சுந்தர்பன்ஸ் மற்றும் காசிரங்கா தேசிய பூங்கா உள்பட பல பல இடங்களை கடந்து வங்கேதசம் சென்றடைய உள்ளது. இது பெரும்பாலும் புனித தலங்களை கடந்து செல்வதால் கப்பலில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட உள்ளதாக கப்பலின் நிர்வாக இயக்குனர் ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

சுவாரசியம் என்ன?
மேலும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்த கப்பலில் பயணித்தால் இந்தியாவின் இயற்கை அழகை மக்கள் ஏறக்குறைய முழுவதுமாக ரசித்த உணர்வு கிடைக்கும். தேசிய சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் வழியாக செல்வதால் வனவிலங்குகளையும் பயணிக்கள் சரிக்க முடியும் என்பதோடு, இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்களையும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.












Click it and Unblock the Notifications