மோடியை பார்த்ததும் நமஸ்தே சொன்ன இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.. ஜி 20 மாநாட்டுக்கு நடுவே சுவாரசியம்
டெல்லி: டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். பின்னர் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடனும் சந்திப்பு நடந்தது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், அர்ஜெண்டினா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இந்த முறை இந்தியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஜி 20 தலைவர்கள் குவிந்தனர். உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அந்தவகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேற்று சந்தித்து பேசினார். இதைப்போல வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், ஜப்பான் பிரதமர் ஆகியோரையும் பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி ஆலோசனை செய்தார். தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சனிக்கிழமை சந்தித்தார்.

பிரதமர் மோடியை சந்திக்க வந்த ரிஷி சுனக், 'நமஸ்தே' பிரதமருக்கு வணக்கம் செலுத்தினார். ஜி-20 மாநாட்டின் முதல் அமர்வுக்குப்பிறகு இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இணைப்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்புக்குப்பின் பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' தளத்தில் கூறியதாவது:- 'ஜி-20 உச்சி மாநாட்டுக்கு நடுவே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது மற்றும் முதலீட்டை அதிகரிப்பது குறித்து நாங்கள் இருவரும் விவாதித்தோம்"என்றார்.












Click it and Unblock the Notifications