2024 தேர்தலில் பிரதமர் மோடியால் வெல்ல முடியாது.. நான் பிரதமர் வேட்பாளர் இல்லை: நிதிஷ்குமார்
டெல்லி: 2024-ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெறமாட்டார்; 2024-ம் ஆண்டுக்கு பின்னர் பிரதமர் பதவியில் மோடி இருக்கமாட்டார் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
பீகாரில் திடீரென பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டது. இதனையடுத்து தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்.
பின்னர் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை ஜேடியூ அமைத்துள்ளது. இப்புதிய அரசின் முதல்வராக இன்று நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். பீகார் துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றார்.
இதன்பின்னர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் நிதிஷ்குமார் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சிதான் என்னை முதல்வராக்க நிர்பந்தித்தது. பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை ஜேடியூ விரும்பவில்லை. அதனால் பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டது.
நான் 2024-ம் ஆண்டு வரை இப்பதவியில் நீடிப்பேனா; இருப்பேனா என தெரியாது. ஆனால் நிச்சயம் 2014-ம் ஆண்டு போல் இனி வரும் ஆண்டுகள் இருக்காது. 2014-ம் ஆண்டு வெற்றி பெற்றவர்கள் (பாஜக) இனி 2024-ம் ஆண்டு வெல்ல முடியாது; பிரதமர் மோடியால் இனி வெல்ல முடியாது.
2024-ம் ஆண்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு இணைந்து செயல்பட வேண்டும். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது நான் பிரதமர் வேட்பாளர் இல்லை. பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.