தமிழகத்துக்கு ரூ2,000 கோடி சிறப்பு நிதி - மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சென்னை: தமிழகத்துக்கு ரூ2,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வேகமாக பரவுவதை தடுக்க மார்ச் 25-ந் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் வரும் 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆனால் ஏப்ரல் 20-ந் தேதி முதலே லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை படிப்படியாக தளர்த்தப்பட்டுவிட்டன. இன்னொரு பக்கம் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

மோடி- முதல்வர்கள் ஆலோசனை
மத்திய அரசும் கொரோனா வைரஸுடன் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் மே 17-ந் தேதிக்குப் பின்னரும் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா? அல்லது சில கட்டுப்பாடுகள் மட்டும் நீடிக்குமா? என்பது தெரியவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி தற்போது வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.

5-வது ஆலோசனை கூட்டம்
கொரோனாவுக்குப் பின் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்திய 5- வது ஆலோசனை கூட்டம் இது. தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே லாக்டவுன் இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க மாநில அரசும் மே 21-ந் தேதி வரை லாக்டவுனை நீட்டித்திருக்கிறது. இதனால் இன்றைய கூட்டத்தில் மாநில முதல்வர்கள் தெரிவிக்கும் கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்பட்டது.

லாக்டவுனுக்குப் பின் பொருளாதாரம்
மேலும் லாக்டவுனுக்குப் பின்னர் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாகவும் மாநில முதல்வர்களின் கருத்தை பிரதமர் மோடி கேட்டறிந்தார். தமிழகத்தில் ஏற்கனவே ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான குழு இதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல பிற மாநில முதல்வர்களும் பொருளாதார மீட்புக்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் இன்று விவரித்தனர்.

ரூ2000 கோடி சிறப்பு நிதி
இந்த கூட்டத்தில், தமிழகத்துக்கு ரூ2,000 கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை முன்வைத்தார். மேலும் மத்திய அரசானது தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையையும் உடனே வழங்க வேண்டும் என்றும் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications