வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி! தொடங்கியது காசி தமிழ் சங்கமம்.. உபி-இல் ஒலிக்கும் தமிழ்
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் மிகவும் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி உள்ளது. வரலாற்றிலும் கூட காசிக்கு முக்கிய இடம் உள்ளது.
அப்படிப்பட்ட காசி நகருக்கும் தமிழ்நாட்டிற்கும் பல காலத்திற்கு முன்பாகவே தொடர்பு இருந்துள்ளது. இந்த தொடர்பை மீண்டும் கண்டறிந்து, கொண்டாடும் வகையில் காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வாரணாசியில் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை இன்று தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி- தமிழில் ட்வீட்!
காசி தமிழ் சங்கமம்
இன்று. நவ 19ஆம் தேதி தொடங்கும் இந்த காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெற உள்ளது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாகத் தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே, இதில் கலந்து கொள்ளத் தமிழ்நாட்டில் இருந்து பலரும் சிறப்பு ரயில் மூலம் காசி சென்றுள்ளனர். காலாசார துறை உட்பட மத்திய அரசின் ஏழு துறைகளுடன் இணைந்து உத்தரப் பிரதேச அரசும் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன.
இன்று தொடக்கம்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாரணாசி சென்றுள்ள தமிழக மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகள் வாரணாசி பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிலையில் இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி
இது தொடர்பாக மோடி தனது ட்விட்டரில், "இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும் அழகிய தமிழ் மொழியையும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க வாரணாசிக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
நோக்கம்
இந்த தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் காசி மற்றும் தமிழகம் என இரு பிராந்தியங்களின் அறிஞர்கள், மாணவர்கள், தத்துவவாதிகள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் மொழி, கலாசாரம் உள்ளிட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். இரு தரப்பு மக்களும் தங்கள் மொழி மற்றும் கலாசாரத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிப்பதே இந்த சங்கமத்தின் நோக்கமாகும்.