ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம்- ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பதில்
டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு ராஜ்யசபாவில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளார்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதன்பின்னர் பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் மத்திய பாஜக அரசை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி நேற்று லோக்சபாவில் பதிலளித்தார். பிரதமர் மோடி தமது பதில் உரையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தமிழகத்தை வாழ்நாளில் ஒருபோதும் பாஜக ஆட்சி செய்யவே முடியாது என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்துக்கும் மோடி பதிலடி கொடுத்தார். 1967-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை என்றும் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தி குளிர்காய நினைக்கிறது காங்கிரஸ் என்றும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
பிரதமர் மோடியின் இந்த பதிலுரை மீது தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் முற்பகல் 11.30 மணிக்கு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications