பாலின சமத்துவம், மகளிர் அதிகாரமளித்தல் அவசியம்:ஜி20 அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
டெல்லி: நீடித்த வளர்ச்சி, பாலின சமத்துவம், மகளிருக்கு அதிகாரம் அளித்தல் அவசியம் என ஜி20 கூட்டமைப்பின் அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தற்போது தலைமை வகித்து வருகிறது. ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு பிரதமர் மோடியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி- காசியில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசியதாவது:
உலகின் தெற்குப் பகுதிக்கு வளர்ச்சி மிக முக்கியமான விஷயமாகும். உலகப் பெருந்தொற்று ஏற்படுத்திய இடையூறுகளால் உலகின் தென்பகுதி நாடுகள் அதிகமாக பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட புவி, அரசியல் பதற்றங்கள் காரணமாக உணவு, எரிபொருள். உரம் ஆகியவற்றுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இத்தகைய சூழலில் நீங்கள் எடுக்கும் முக்கியமான முடிவுகள் மனிதக்குலத்திற்கு பயனளிக்கின்றன. நீடித்த வளர்ச்சி இலக்குகள் நின்று விடாமல் காப்பது மக்கள் அனைவரது கூட்டுப் பொறுப்பாகும். இந்த இலக்குகளை அடைய செயல்திட்டம் அவசியம் என்று உலகிற்கு ஒரு வலுவான செய்தியை தென்பகுதி நாடுகள் அறிவிக்க வேண்டும்.
நமது முயற்சிகள் விரிவானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நியாயமானதாகவும். நிலைத்தன்மை மிக்கதாகவும் இருக்க வேண்டும். நீடித்த வளர்ச்சி இலக்குளை அடைய முதலீடுகளை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பல நாடுகள் எதிர்கொள்ளும் கடன் அபாயங்களுக்கு தீர்வு காண வேண்டும். பன்நோக்கு நிதி நிறுவனங்கள் சீர்திருத்தத்திற்கு உட்பட்டு தகுதியை விரிவுபடுத்தி, தேவையானவர்களுக்கு நிதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் முயற்சிகளை எடுத்துள்ளோம். இத்தகைய பின்தங்கிய மாவட்டங்கள் இன்று நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்குவிப்பவையாக உருவெடுத்துள்ளன. இந்த வளர்ச்சி மாதிரியை ஜி20 மேம்பாட்டு அமைச்சர்கள் ஆய்வு செய்ய வேண்டும். 2030 நிகழ்ச்சி நிரலை விரைவுபடுத்துவதற்கு இந்தப் பணி பொருத்தமாக இருக்கும்.
உங்கள் முன்பு இருக்கும் மிகமுக்கியமான விஷயங்களில் வளர்ந்து வரும் தரவுப்பிளவும் ஒன்றாகும். அர்த்தமுள்ள கொள்கை வகுத்தல், திறன் வாய்ந்த வள ஒதுக்கீடு, செயல்திறன் மிக்க பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றுக்கு உயர்தரமான தரவு மிகவும் அவசியமாகும். தரவு பிளவை சரிபடுத்த தொழில்நுட்பப் பயன்பாடு அவசியமானது. இந்தியாவில் மக்களை அதிகாரப்படுத்துதல், தரவுகளை அணுகுதல், அனைவரையும் உள்ளடக்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றின் கருவியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரும் புரட்சிகரமான மாற்றத்தை டிஜிட்டல்மயமாக்கம் கொண்டு வந்துள்ளது. விவாதம், மேம்பாடு, வளரும் நாடுகளுக்கு தரவுகளை அளித்து உதவுதல் ஆகிய விஷயங்களில் இந்தியா தனது அனுபவத்தை மற்ற கூட்டு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
இந்தியாவில் நதிகள், மரங்கள், மலைகள் மற்றும் இயற்கையின் அனைத்து அம்சங்களுக்கும் நாங்கள் மரியாதை செலுத்தி வருகிறோம். பூமிக்கு உகந்த வாழ்க்கை முறையை பாரம்பரியமான இந்திய சிந்தனைகள் மேம்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு ஐநா பொதுச் செயலாளருடன் லைஃப் இயக்கத்தை நான் தொடங்கி வைத்தேன். உயரிய கொள்கைகளுடன் இந்தக் குழு, வளர்ச்சிக்காக உழைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பருவநிலை நடவடிக்கைக்கு இது குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இருக்கும்.

நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது பாலின சமத்துவம் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் அவசியமாகும். மகளிருக்கு அதிகாரமளிப்பதுடன் இந்தியா நின்று விடாமல் மகளிர் தலைமையிலான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பெண்கள் வளர்ச்சி இலக்குகளை நிர்ணயித்து வருவதுடன், வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான முகவர்களாகவும் அவர்கள் திகழ்கின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்.
காசியின் எழுச்சி, இந்தியாவின் நீண்ட கால பாரம்பரியங்களை வலுப்படுத்துகிறது. பிரதிநிதிகள் எல்லா நேரமும் கூட்டம் நடக்கும் அறைகளிலேயே காலத்தை கழிக்காமல் காசியின் உணர்வை அனுபவிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவீர்கள் என நாம் நம்புகிறேன். காசி என்னுடைய தொகுதி என்பதால் நான் இதைக் கூறுகிறேன். கங்கை ஆரத்தியை கண்டுகளிப்பதும், சாரநாத்தை பார்வையிடுவதும். நீங்கள் விரும்பும் முடிவுகளை எட்ட உங்களை ஊக்குவிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். உலகின் தென்பகுதி நாடுகளின் விருப்பங்களை நிறைவேற்ற வகை செய்யும், 2030 நிகழ்ச்சிநிரலை மேம்படுத்தும் வெற்றிகரமான விவாதங்களை மேற்கொள்ள எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications