500 பேரை கொன்ற ஒரே ஒரு தாக்குதல்.. ஒட்டுமொத்த 'ஆதரவை'யும் பறிகொடுத்த இஸ்ரேல்.. மோடி சொன்னது என்ன?
டெல்லி: பாலஸ்தீனத்தின் காஸா மருத்துவமனை மீதான தாக்குதலால் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளின் கடும் கோபத்துக்கும் அதிருப்திக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது இஸ்ரேல். இந்த வரிசையில் நமது இந்தியாவும் இணைந்துள்ளது.

இஸ்ரேல், பாலஸ்தீன விவகாரங்களில் இந்தியா நெடுநீண்டகாலமாக பாலஸ்தீனத்தை ஆதரித்து வந்திருக்கிறது. அண்மைகாலமாக இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவும் இஸ்ரேலும் மிக நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டன. இந்தியாவுக்கான பல்வேறு துறைசார் இஸ்ரேலின் ஏற்றுமதிகள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியது. ஒரு காலத்தில் ராணுவ பாதுகாப்பு தளவாடங்களில் ரஷ்யா இருந்த இடத்தில் இஸ்ரேலை நிறுத்தியது மத்திய அரசு. இதனால் சர்வதேச விவகாரங்களிலும் இஸ்ரேல், அமெரிக்காவுடன் இணைந்து நிற்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது.
பிரதமர் மோடி நிலைப்பாட்டால் சர்ச்சை: இஸ்ரேல் மீதான பாலஸ்தீன ஹமாஸ் ஜிஹாதிகளின் அக்டோபர் 7-ந் தேதி தாக்குதலை கண்டித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதுவரையிலான பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து இந்தியா விலகுவதாக விமர்சனங்களும் எழுந்தன. மணிப்பூர் மாநிலம் 6 மாதங்களாக பற்றி எரிகிறது; அது பற்றி பேசாத பிரதமர் மோடி, மணிப்பூர் சென்று அமைதியை நிலைநாட்டாத பிரதமர் மோடி, இஸ்ரேல்- பாலஸ்தீன விவகாரம் குறித்து பேசுவதா? என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இன்றும் விமர்சித்து வருகின்றனர்.
Deeply shocked at the tragic loss of lives at the Al Ahli Hospital in Gaza. Our heartfelt condolences to the families of the victims, and prayers for speedy recovery of those injured.
— Narendra Modi (@narendramodi) October 18, 2023
Civilian casualties in the ongoing conflict are a matter of serious and continuing concern.…
500 பேரை பலி கொண்ட இஸ்ரேல் தாக்குதல்: இந்நிலையில் காஸாவில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று இரவு திடீரென குண்டு மழை வீசின. சரமாரியாக வீசப் பட்ட இந்த வான்வழித் தாக்குதலில் ஒரே இரவில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த உலக நாடுகளை பேரதிர்சிக்குள்ளாக்கியது. இதனால் ஜோர்டான், துருக்கி என பல நாடுகளில் இஸ்ரேல் தூதரகங்களுக்கு எதிராக போராட்டங்கள், வன்முறைகள் வெடித்தன. இஸ்லாமிய நாடுகள் அனைத்துமே இப்போது இஸ்ரேல் மீது பெரும் கோபத்தில் இருக்கின்றன. இதுவரை இஸ்ரேலுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளும் கூட இந்த 500 பேர் படுகொலை சம்பவத்தில் தங்களது குரலை மாற்றிக் கொண்டிருக்கின்றன.

பிரதமர் மோடி சொன்னது என்ன?: இந்த வரிசையில் நமது பிரதமர் மோடியும் இஸ்ரேலின் இந்நடவடிக்கையை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில்,"காஸாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இதய பூர்வமான இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.
தற்போது நடைபெற்று வரும் மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலையளிக்கும் தொடர் விஷயமாகும். சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்." என பதிவிட்டுள்ளார். இஸ்ரேல்தான் இத்தாக்குதலை நடத்தியது என குறிப்பிடாத போதும் உரியவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பது இஸ்ரேலை குறிக்கிறது.. இப்படித்தான் ஒட்டுமொத்த உலக நாடுகளின் ஆதரவை இஸ்ரேல் மெல்ல இழக்கிறது என்கின்றனர் மூத்த அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications