ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம், ஒரே ரேஷன் கார்டு.. தீபாவளி நாளில் மோடி வீசிய 'அணுகுண்டு'!
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றுக்கான மசோதாக்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஆழமாக குழிதோண்டிப் புதைத்துவிட்டோம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்களில் பங்கேற்று சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மலரஞ்சலி செலுத்தினார். மேலும் ஒற்றுமை தின அணிவகுப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். இதில் 9 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேச காவல்துறை, 4 மத்திய ஆயுத காவல்படைகள், தேசிய மாணவர் படை மற்றும் அணிவகுப்பு இசைக்குழு ஆகியவற்றைச் சேர்ந்த 16 அணிவகுப்புக் குழுக்கள் இடம் பெற்றன.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: சர்தார் வல்லபாய் பட்டேல் என்பது சக்திவாய்ந்த வார்த்தை. இந்த நிகழ்ச்சி ஒற்றுமையின் சின்னமாக சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அருகே நடைபெறுகிறது. மினி இந்தியாவை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் அற்புதமாக நடத்தப்பட்டன. தேசிய ஒற்றுமை தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர தினம், குடியரசு தினம் போல தேசிய ஒற்றுமை தினம் நாட்டு மக்களுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.
தீபாவளி: இன்று தீபாவளி. உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த ஆண்டு நிகழ்ச்சிகள் இன்று முதல் தொடங்குகின்றன இன்று முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
மகாராஷ்டிரா சிவாஜி: சத்ரபதி சிவாஜி, அன்னியர் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் விரட்டியடித்தார். மகாராஷ்டிராவின் ராய்காட் கோட்டை இன்றைக்கும் சத்ரபதி சிவாஜியின் சரித்திரத்தையும் பெருமையையும் பறைசாற்றி நிற்கிறது. சமூக நீதியின் விழுமியங்களை, தியாகங்களை ராய்காட் கோட்டை வெளிப்படுத்துகிறது. அதேபோல இந்த ஏக்தா நகரமும் ஒற்றுமையின் சின்னமாகதிகழ்கிறது.
புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் கீழ் நாட்டின் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி, பாலி, பிராகிருதம் என அனைத்து மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் ரயில் சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அந்தமான் நிக்கோபர் தீவுகளும் லட்சத்தீவுகளும் அதிவேக இணைய இணைப்புகள் மூலம் நாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம்: ஜிஎஸ்டி போல ஒரே நாடு- ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. தேசிய குடும்ப அட்டையையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதங்களின் சார்பில்லாத பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்.
370-வது பிரிவு ரத்து: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் முதல்வர் இந்த முறைதான் முதல் முறையாக இந்திய அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழியேற்று பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஒற்றுமைக்கான பயணத்தில் இது சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல். ஜம்மு காஷ்மீர் தற்போது பிரிவினைவாதம், பயங்கரவாதத்தை நிராகரித்துவிட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஆழக் குடி தோண்டி புதைக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இந்தியாவில் நக்சலிசம் எனப்படும் மாவோயிஸம் தனது கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications