இன்றைய சூழ்நிலைகளுக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டும்: பிரதமர் மோடி
டெல்லி: இன்றைய கால சூழ்நிலைகளுக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஐநா பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசியதாவது:
ஐநா சபையின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம். தற்போதைய உலக சூழ்நிலைக்கேற்ப ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டிய தேவை உள்ளது.

2-ம் உலகப் போருக்குப் பின்னர் ஐநா சபையை உருவாக்கிய 50 நிறுவன நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐநா சபையில் இன்று 193 நாடுகள் இணைந்திருக்கின்றன. ஐநா சபையிடம் இருந்து உலக நாடுகளின் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
ஐநா சபை உருவாக்கப்பட்ட போது உலகில் நிலவிய நிலைமை இப்போது இல்லை. தற்போது ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இப்படியான ஒரு மிகவும் முக்கியமான காலகட்டத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு (நிரந்தரமற்ற உறுப்பினர்) இந்தியா தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இது மிகவும் முக்கியமான தருணம். சர்வதேச அளவில் நல்லிணக்கம் நீடிக்க, சமூக பொருளாதார சமநிலையை வலிமைப்படுத்த இந்தியா தமது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கும்.
இந்த பூமிப் பந்தின் குழந்தைகள் நாம். பொதுவான பிரச்சனைகளுக்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தீர்வு காண்போம். இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications