அடடே! உடல் பருமனை குறைப்பது எப்படி தெரியுமா?வானொலி நிகழ்ச்சியில் Health Tips தந்த பிரதமர் மோடி!
டெல்லி: "உடலுறுதிப்பாடும், ஆரோக்கியமும் உடைய ஒரு தேசமாக ஆக, நாம் உடற்பருமன் பிரச்சினையை எதிர்கொண்டாக வேண்டும்; இன்று எட்டில் ஒருவர், உடற்பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்; குழந்தைகளிடமும் இந்த உடற்பருமன் பிரச்சினை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது" என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தமது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உடற்பருமன் தொடர்பாக பேசியதாவது: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவின் போது ஒரு மிகவும் முக்கியமான விஷயத்தை நான் முன்னெடுத்தேன். இது தேசத்தில் ஒரு புதிய விவாதப் பொருளானது. அதாவது உடற்பருமன். உடலுறுதிப்பாடும், ஆரோக்கியமும் உடைய ஒரு தேசமாக ஆக, நாம் உடற்பருமன் பிரச்சினையை எதிர்கொண்டாக வேண்டும். இன்று எட்டில் ஒருவர், உடற்பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டுகளில் உடற்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது என்றாலும், இதைவிடக் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், குழந்தைகளிடமும் இந்த உடற்பருமன் பிரச்சினை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, 2022ஆண்டில், உலகெங்கிலும் சுமார் இரண்டரை கோடி மக்கள் அதிக எடை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அதாவது தேவைக்கதிகமாக உடல் எடை உடையவர்களாக இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிபரம் மிகவும் கடுமையான ஒன்று, நம் அனைவரையும் ஆழச் சிந்திக்க வைப்பது, ஏன் இப்படி இருக்கிறது என்று ஆராயச் செய்கிறது. அதிக உடல் எடை அதாவது உடற்பருமன் பல வகையான பிரச்சினைகளுக்கு, நோய்களுக்கு வித்திடுகிறது. நாமனைவரும் இணைந்து சின்னச்சின்ன முயற்சிகள் மூலமாக இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக ஒரு வழிமுறையை ஆலோசனையாக அப்போது நான் கூறினேன் அல்லவா? உண்ணும் உணவில் பத்து சதவீதம் எண்ணையைக் குறைத்துக் கொள்வது. ஒவ்வோரு மாதமும் பத்து சதவீதம் எண்ணையை நான் குறைப்பேன் என்று தீர்மானியுங்கள். உணவு எண்ணையை வாங்கும் போது பத்து சதவீதம் குறைவாக வாங்குவது என்று நீங்கள் தீர்மானியுங்கள்.

உணவு எண்ணெயின் குறைவான பயன்பாடும், உடற்பருமனை எதிர்கொள்வதும் என்னுடைய விருப்பத் தேர்வு மட்டுமல்ல, குடும்பத்தினருக்கான நம்முடைய கடமையும் ஆகும். உணவுகளில் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதால் இருதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற ஏராளமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நமது உணவுகளில் சின்னச்சின்ன மாறுதல்களைச் செய்வதன் மூலமாக, நாம் நமது எதிர்காலத்தை பலமானதாகவும், உடல்உறுதியானதாகவும், நோயற்றதாகவும் ஆக்க முடியும். ஆகையால் நாம் இனியும் காலம் தாழ்த்தாமல், இந்தத் திசையில் முயற்சிகளை மேற்கொள்வோம், இதை நமது வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தொடங்குவோம். இன்றைய மனதின் குரலின் இந்தப் பதிவிற்குப் பிறகு, பத்து பேர்களிடம் வேண்டிக் கொள்கிறேன், சவாலை முன்வைக்கிறேன், நீங்கள் உங்களுடைய உணவுகளிலே எண்ணெயின் பயன்பாட்டை பத்து சதவீதம் குறைத்துக் கொள்ள முடியுமா? கூடவே, நீங்களும் உங்கள் பங்குக்கு இன்னும் பத்து நபர்களிடம் இப்படி ஒரு சவாலை விடுக்க முடியுமா என்றும் கேட்டுக் கொள்கிறேன். இதனால் உடற்பருமனோடு போராட பேருதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications