பொருளாதாரத்தை மீட்டெடுக்க.. 20 லட்சம் கோடி நிதி பேக்கேஜ்.. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி
டெல்லி: இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு, மத்திய அரசு, ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி பேக்கேஜ் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
Recommended Video
இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: கொரோனா வைரசுக்கு இந்த நாடு பலரை இழந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக வரும் தகவல் வேதனை அளிக்கிறது.
ஒரு பக்கம் ஊரடங்கு நீட்டிப்பு.. மறுபக்கம் ரூ.20 லட்சம் கோடி நிவாரண பேக்கேஜ்.. மோடி அதிரடி அறிவிப்பு
உலகம் பாதிப்பு
ஒரு வைரஸ் உலத்தில் பெரும் நாசம் ஏற்படுத்தியுள்ளது. நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற ஒரு நெருக்கடியை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லை, கேள்விப்பட்டதில்லை. இது நிச்சயமாக மனிதகுலத்திற்கு கற்பனை செய்ய முடியாதது. இது முன்னர் நடந்திராதது. ஆனால் இந்த வைரஸிடம் மனிதகுலம் தோற்காது. நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல் முன்னேற வேண்டும்.
உற்பத்தி
கொரோனா பாதிப்பு தொடங்கியபோது பிபிஇ கிட்கள் நம்மிடம் கிடையாது. என்95 மாஸ்க் தயாரிக்கவில்லை. இப்போது நாளொன்றுக்கு இரண்டு லட்சம் உருவாக்கி வருகிறோம். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாம் இப்போது முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் இந்த வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது.
சுய சார்பு
உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நினைப்பது இந்தியாவின் குணம். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுயசார்பு அடைவது உலகத்திற்கே நல்ல செய்தி. உலகத்திற்கே, இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றப்பட வேண்டும் என்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்தியா இந்த இக்கட்டான நிலையை, வாய்ப்புகளை உருவாக்குவதற்கான இடமாக மாற்றிக் கொண்டு உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் உலகம் முழுக்க அனுப்பப்பட்டு மக்களுக்கு உதவி வருகிறது.
இந்திய தூண்கள்
இந்தியாவின் 5 தூண்கள் இவைதான்:
- பொருளாதாரம்
- உள்கட்டமைப்பு
- தொழில்நுட்பத்தால் இயக்கம்
- துடிப்புள்ள மக்கள்தொகை
- தேவை
பொருளாதார தொகுப்பு
நான் இன்று ஒரு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவிக்கிறேன். நாட்டுக்கான இந்த சிறப்பு பொருளாதார நிவாரண தொகுப்பு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10% ஆகும். கோவிட் -19 தொடர்பாக இதுவரை அரசு வெளியிட்ட அறிவிப்புகள், ரிசர்வ் வங்கியின் நிதி சார்ந்த அறிவிப்புகள் மற்றும் இன்றைய நிதி தொகுப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் கோடி வரை இருக்கும். சிறப்பு பொருளாதார தொகுப்பு ரூ .20 லட்சம் கோடி என்பது நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10 சதவீதமாகும். இவ்வாறு மோடி பேசினார்.