சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு எப்போது? பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை
டெல்லி: சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி மோடி இன்று மாலை உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை இத்தனை காலமாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது தான் வைரஸ் பரவல் மெல்லக் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். பொதுத் தேர்வை எப்படி நடத்தலாம், எப்போது நடத்தலாம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இதில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பிலும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். முன்னதாக, கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தத் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது.
அதேநேரம் மாணவர்களுக்கு +2 பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் பரிந்துரையாக இருந்தது. இதனால், இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், பொதுத் தேர்வு தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவை அறிவிப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்ற்தில் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சிபிஎஸ்இ +2 தேர்வு நடத்துவது குறித்து முடிவு வெளியானதும், தமிழக அரசும் மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.