இன்று நைஜீரியா புறப்பட்டுச் செல்லும் பிரதமர் மோடி.. பிரேசில், கயானாவுக்கும் விசிட்.. ஏன் முக்கியம்?
டெல்லி: அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி இன்று ( நவம்பர் 16) நைஜிரியா புறப்பட்டுச் செல்கிறார். நைஜீரியா அதிபர் போலா அகமது தினுபு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று அந்நாட்டுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். பின்னர், பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர அரசு முறைப் பயணமாக 3 நாடுகளுக்குச் செல்கிறார். இன்று நைஜீரியா புறப்பட்டுச் செல்கிறார் மோடி. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1996க்குப் பிறகு நைஜீரியா செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமை பெறுகிறார் நரேந்திர மோடி.

இந்த பயணத்தின் போது அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேச உள்ளார் பிரதமர் மோடி. நாளை நவம்பர் 17 ஆம் தேதி நைஜீரியா நாட்டு அதிபர் போலா அகமது தினுபுவை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச உள்ளார் பிரதமர் மோடி.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான நைஜீரியா, அதன் பெட்ரோலியத் துறையை மாற்றியமைத்துள்ளது, நீண்ட காலமாக ஊழல் மற்றும் திறமையின்மையால் வளர்ச்சி தடைபட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட்டதில் இருந்து உற்பத்தியை கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்நிலையில், அங்கு பிரதமர் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து பிரேசில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ரியோ டி ஜெனிரோ நகரில் 18 ஆம் தேதி தொடங்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டுக்கு பிரேசில் அதிபர் லுயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தலைமை தாங்குகிறார்.
இந்த மாநாட்டில், நீடித்த வளர்ச்சி, பொருளாதார ஸ்திரத் தன்மை உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைக்க உள்ளார். இந்த மாநாட்டுக்கு இடையே, பிரேசில் அதிபர் உட்பட பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
பிரேசிலை அடுத்து, கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி வரும் 19 ஆம் தேதி அந்த நாட்டுக்கு செல்கிறார். 20 ஆம் தேதி அதிபர் இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
இதையடுத்து கயானா நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ள பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார். கடந்த 1968-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கயானாவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத் தக்கது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் சூழலில் கடந்த சில நாட்களாக தீவிர பரப்புரை மேற்கொண்டு வந்த பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக இன்று தொடங்கி மூன்று நாடுகளுக்குச் செல்கிறார்.












Click it and Unblock the Notifications