நீதிமன்ற உத்தரவை மீறிய எஸ்பிஐ! கால தாமதம் செய்ததற்கு இதுதான் காரணமா? அரசியல் விமர்சகர்கள் விளக்கம்
டெல்லி: தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ வங்கிக்கு கூடுதல் அவகாசம் கொடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், எஸ்பிஐ கால தாமதம் கோருவதற்கான காரணத்தை அரசியல் விமர்சகர்கள் விளக்கியுள்ளனர்.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன?: அரசியல் கட்சிகளுக்கு தனிநபர் அல்லது நிறுவனங்கள் ரொக்கமாகவோ, காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவித்தது.

இதனையடுத்து இது 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் எஸ்பிஐ வங்கி ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வெளியிட்டது.
நீதிமன்ற தடை: 'தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும்' என்று கூறி தேர்தல் பத்திரங்களுக்கு பிப்ரவரி மாதம் 15ம் தேதி அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். மட்டுமல்லாது, இது தொடர்பான விவரங்களையும் வெளியிட மார்ச் 6ஆம் தேதி வரை அவகாசம் அளித்து எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவு பிறப்பித்தது. அதற்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இதை பெற்று தங்களது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மார்ச் 13ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
குற்றச்சாட்டுகள் என்ன?: தேர்தல் பத்திரங்கள் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ரூ11,733 கோடி நன்கொடையாக அரசியல் கட்சிகள் பெற்றிருக்கின்றன. இதில் பாஜக மட்டும் ரூ.6,566 கோடி பெற்றிருக்கிறது. அதாவது மொத்த தேர்தல் பத்திரங்களில் 58.5% நிதி பாஜவுக்கும் மட்டும் கிடைத்திருந்தது. பாஜக தவிர காங்கிரஸ் ரூ.1,123 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,092 கோடியும் நன்கொடையாக பெற்றிருக்கிறது. இந்த விஷயம்தான் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியது.
தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. இதில் சமபலத்துடன்தான் அரசியல் கட்சிகள் மோத வேண்டும். ஆனால், இந்த தேர்தல் பத்திரம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு (பாஜக) மட்டும் அதிக வாய்ப்புகளை வழங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.
எஸ்பிஐ தாமதம்: இப்படி இருக்கையில் தேர்தல் பத்திரங்களை தடை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற தொகை எவ்வளவு? யார் யாரிடமிருந்து இந்த கட்சிகள் நிதியை பெற்றிருக்கின்றன? என்கிற விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதில் எஸ்பிஐ தொடர்ந்து காலதாமதம் செய்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான இன்றைய வழக்கு விசாரணையில், "நாளைக்குள் (மார்ச்.12) தேர்தல் ஆணையத்திடம் SBI பத்திர விவரங்களை வழங்க வேண்டும். பின்னர் மார்ச்.15-ம் தேதி தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் விவரங்களை வெளியிட வேண்டும். உத்தரவை செயல்படுத்த தவறினால் SBI அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நீதிமன்றம் எச்சரித்து உத்தரவிட்டுள்ளது.
எஸ்பிஐ தாமதம் ஏன்?: உச்சநீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு எஸ்பிஐ ஏன் கால தாமதம் செய்தது என்பதற்கு பத்திரிகையாளர் தராசு ஷியாம் விளக்கமளித்திருக்கிறார். அதாவது, "தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதி அளவில் மிகப்பெரியது. இதை வழங்கியவர்கள் பொருளாதார குற்றவாளிகள் என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற ஆட்களிடமிருந்து நிதி பெறப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகதான் எஸ்பி கால தாமதம் செய்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு யார் யார் நிதி கொடுத்தார்கள் என்கிற விவரங்கள் வெளியானால், அது வாக்கு வங்கியை பாதிக்கும் என்கிற அச்சம் காரணமாக எஸ்பிஐ வங்கியை வேண்டுமென்றே காலத்தாமதம் செய்ய, மத்திய அரசு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications