அயிட்டம், கொரோனாவை குணமாக்கும் கோமியம்... 2020-ல் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் சர்ச்சை பேச்சுகள்
டெல்லி: நாடே கொரோனாவால் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த காலத்திலும் நமது அரசியல் தலைவர்களின் பல பேச்சுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.
2020-ம் ஆண்டு புயலை கிளப்பிய சர்ச்சை பேச்சுகள் சிலவற்றை பார்ப்போம்
- மத்திய பிரதேச இடைத்தேர்தலில் பாஜகவின் இமர்த்தி தேவியை அயிட்டம் என்றார் முன்னாள் முதல்வர் கமல்நாத். நாடு முழுவதும் கமல்நாத்தின் இந்த பேச்சு காட்டுத்தீயாக பரவியது. பாஜக தலைவர்கள் பதிலுக்கு, எங்க ஊரில் கமல்நாத் பேசியிருந்தால் போட்டு தள்ளியிருப்போம் என பேசியதும் சர்ச்சையாகிப் போனது.
- பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் விவகாரத்தில் நடிகை கங்கனா ரனாவத், சிவசேனா இடையே பகிரங்கமான மோதல் நடைபெற்றது. ஒருகட்டத்தில் கங்கனா ரனாவத் மும்பைக்கு வரக் கூடாது என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சொல்ல, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார் கங்கனா ரனாவத். இதனால் கடும் எதிர்ப்புக்குள்ளானார் கங்கனா ரனாவத்.
- ஜம்மு காஷ்மீரில் 370வது அரசியல் சாசனம் நீக்கப்பட்டு ஓராண்டான நிலையிலும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார் அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா. ஒரு பேட்டி ஒன்றில், காஷ்மீருக்குள் சீனா வந்தால் கூட பரவாயில்லையே என பரூக் அப்துல்லா சொன்ன கருத்து கடும் கண்டனத்துக்குள்ளானது
- டெல்லி தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக மூத்த தலைவர் அனுராக் தாகூர், தேசதுரோகிகளை துப்பாக்கியால் சுட்டு கொல்வேன் என பேசியது வீடியோவாக வெளியாகி சர்சையானது.
- ராஜஸ்தான் ஆட்சி கவிழ்ப்பு விவகாரங்களில் சச்சின் பைலட்டை கடுமையாக தாக்கி பேசினார் முதல்வர் அசோக் கெலாட். அப்போது, சோம்பேறி, வேஸ்ட் என பைலட்டை வெளுத்து வாங்கிய கெலாட்டின் விமர்சனம் பஞ்சாயத்தில் மேலும் தீயை ஊற்றியது.
- கொரோனா தொடர்பாக நமது தலைவர்கள் பேசிய பேச்சுகள் அத்தனையும் அடேங்கப்பா ரகம்தான். அஸ்ஸாம் பாஜக எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா ஒருபடி மேலேபோய், கோமியம் குடிங்க.. கொரோனா போய்விடும் என்றாரே பார்க்கலாம். அட அடதான்
- அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பக்குவமில்லாதவர், டென்சன்பேர்வழி என சொல்லப் போய் இண்டர்நேஷனல் அக்கப் போரானது.
- இஸ்லாமியர்கள் கடைகளில் காய்கறிகளை வாங்க வேண்டாம் என கொரோனா லாக்டவுன் காலத்தில் உபி பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் திவாரி பேசியது சர்ச்சையாக பின்னர் அவர் மன்னிப்பும் கேட்டார்.
- பிராமணர்கள் என அழைத்தால் அவர்கள் மோசமாக உணருவதில்லை; ஆனால் சூத்திரர்களை சூத்திரர்கள் என அழைத்தால் கோபம் வருகிறது; மோசமாக ஏன் உணர்கிறார்கள் என்றார் சர்ச்சைகளின் சிகரம் பாஜக எம்பி பிரக்யா தாகூர்.
- எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை படகுகளுடன் சிறைபிடியுங்க என இலங்கை அமைச்சரும் தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியுமான டக்ளஸ் தேவானந்தா பேசியது இன்னொரு இண்டர்நேஷனல் பஞ்சாயத்து.
- பாலியல் பலாத்காரத்துக்குள்ளான ஒரு பெண் மானம்னு இருந்தா செத்து போய்விடுவார் என கேரளாவின் காங். மூத்த தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியது பெண்கள் அமைப்புகளை கொந்தளிக்க வைத்தது.
- நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் தொடர்பாகவும் திருப்பதி கோவிலில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது என ஜோதிகாவின் மாமனார் நடிகர் சிவகுமாரும் பேசியதாக வெளியான வீடியோக்களும் முக்கிய சர்ச்சையானது.
English summary
Here is politicians and Celebs Controversial statements in 2020.