“சிமி” மாடல்.. 5 ஆண்டுக்கு பின் “பி.எஃப்.ஐ” அமைப்பால் செயல்பட முடியுமா? “வரலாறு” சொல்வது இதான்
டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு விதித்து இருக்கும் தடை உத்தரவில் 5 ஆண்டுகள் மட்டும் தடை என குறிப்பிட்டிருப்பது ஏன்? 5 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அமைப்பால் செயல்பட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் கிளைகளை பரப்பி செயல்பட்டு வந்தது. தலித், சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசு, பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தது.
அதே நேரம் பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கலவரங்களை தூண்டி வருவதாக குற்றம்சாட்டி அவற்றை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தன.
மத்திய அரசின் தடைக்கு எதிர்ப்பு.. இந்தியா முழுவதும் இன்று தடையை மீறி

என்.ஐ.ஏ சோதனை
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் சோதனை செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முக்கிய தலைவர்கள் பலரை கைது செய்து இருக்கிறார்கள். இதனை அந்த அமைப்பினர் மட்டுமின்றி பல்வேறு மதசார்பற்ற இயக்கங்களும், கட்சிகளும் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

நேற்றும் ரெய்டு
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று மீண்டும் காவல்துறை சோதனை நடத்தியது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. நிர்வாகிகள் வீடுகளில் காவல்துறை சோதனை மேற்கொண்டது.

5 ஆண்டுகள்
நேற்று நடைபெற்ற சோதனைக்கு பின்னர் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளை சட்டவிரோதமானவை என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், அதற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து இருக்கிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு குற்றச்சாட்டுகளை அந்த அமைப்பு மீது என்.ஐ.ஏ. சுமத்தியது.

துணை அமைப்பு
இத்துடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை அமைப்புகளான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், கேம்பஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பு, நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட், ஜூனியர் ஃப்ரண்ட், எம்பவர் இந்தியா ஃபவுண்டேசன், ரிஹாப் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

5 ஆண்டுக்கு பின்
மத்திய அரசின் உத்தரவில் 5 ஆண்டுகள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதன் பிறகு அந்த அமைப்புகளால் செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதையே வரலாறு கூறுகிறது. இதற்கு முன்பாக தடை செய்யப்பட்ட சிமி அமைப்புக்கும் இதுபோன்று காலவரையறையுடனே மத்திய அரசு தடை விதித்தது.

நீட்டிக்கப்படும் தடை
கடந்த 2001 ஆம் ஆண்டு சிமி அமைப்புக்கு முதல்முறையாக தடை விதிக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிமி அமைப்பு மீதான தடைகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயத்தில் விசாரணை செய்யப்பட்டு மேலும் தடை நீக்கப்பட்டது. இதே பாணியில் பி.எஃப்.ஐ மீதான தடையும் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம் என்றே கூறப்படுகிறது.