ஒரே நாடு, ஒரே தேர்தல்.. நிதிச்சுமையை குறைக்கும்.. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆதரவு
டெல்லி: குடியரசு தினம் கொண்டாட்டப்படவுள்ள நிலையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திரெளபதி முர்மு, இந்த திட்டம் நிர்வாகத்தன்மையை ஊக்குவிக்கும் என்றும், நிதிச்சுமையை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 76வது குடியரசு தினம் நாளை டெல்லியில் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமைப் பாதையில் நடக்கும் பிரம்மாண்ட விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். இதன்பின்னர் இந்தியாவின் கலாச்சாரமும், பண்முகத்தன்மை மற்றும் பாதுகாப்பு வல்லமை தொடர்பான அணிவகுப்பு நடக்கவுள்ளது.

இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு திரெளபதி முர்மு உரையாற்றியுள்ளார். அதில், கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பு நமது முன்னேற்றத்திற்கு வழி வகுத்துள்ளது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். காலனித்துவ மனநிலையை மாற்ற நாம் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். புதிய குற்றவியல் சட்டங்கள் தான் காலனித்துவ மனநிலையில் இருந்து வெளியே வந்ததற்கு ஆதாரம்.
கல்வித்துறையில் தொடர்ந்து நடக்கும் முதலீடுகள் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கல்வியின் தரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் நிர்வாக நிலைத்தன்மையை ஊக்குவிக்கும், நிதிச்சுமையை குறைக்கும். இந்த திட்டத்தால் அரசின் கொள்கை முடிவுகள் முடக்கப்படாமல் இருக்கும். அதேபோல் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைக்க புதிய சட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் பெற்ற போது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பசி, பட்டினி, வறுமை நிலவியது. ஆனால் நாம் நம் மீது நம்பிக்கை வைத்து வளர்ச்சி பெறுவதற்கான சூழல்களை உருவாக்கினோம். சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதாரம் முக்கியமான பங்காற்றி வருகிறது. இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் தான் காரணம். அண்மை காலங்களில் இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது. இதன் மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் வருமானம் உயர்ந்து அவர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications