தமிழக ஆளுநர் அனுப்பி வைத்த மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கை செல்லாது-உச்சநீதிமன்றம் அதிரடி!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்த, தமிழ்நாடு அரசின் மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கைகளையும் உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிய நடவடிக்கையும் செல்லாது; அப்படி ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது என்பது உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பாகும்.
தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டு வைத்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் பெஞ்ச் இன்று இந்த வழக்கில் அதிரடித் தீர்ப்புகள் வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினார்; இதனையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் 10 மசோதாக்கள் மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
2-வது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட இந்த 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்திருக்க வேண்டும்; ஆனாள் ஆளுநரோ, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது; அரசியல் அமைப்புக்கு எதிரானது; ஆளுநரின் இந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. அத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய இந்த மசோதாக்கள் மீதான ஜனாதிபதி நடவடிக்கையும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆளுநர் நிறுத்தி வைத்த- தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் தரப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவையும் நிர்ணயித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications