அசத்தல் வரவேற்பு.. உச்சி குளிர்ந்த இங்கிலாந்து பிரதமர்..! மோடிக்கு நன்றி சொன்ன போரிஸ் ஜான்சன்!
டெல்லி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்த போரிஸ் ஜான்சன் இன்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் போரிஸ் ஜான்சனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்த மகிழ்ச்சியான வரவேற்புக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு போரிஸ் ஜான்சன் நன்றி தெரிவித்தார்.
Recommended Video
இந்தியா, பிரிட்டன் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியா வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேற்று அங்குள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று பார்வையிட்டார். மேலும் தொழில்அதிபர்களுடன் கலந்துரையாடினார். இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேச உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
இந்த சந்திப்பின்போது இருநாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு பேச்சுகள் நடத்தப்பட உள்ளது. மேலும் முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இருநாடுகளின் உறவுகள் குறித்தும், இந்தோ-பசிபிக் பிராந்தியங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போரிஸ் ஜான்சனுக்கு வரவேற்பு
இந்நிலையில் டெல்லி சென்ற போரிஸ் ஜான்சனை ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அங்கு போரிஸ் ஜான்சனுக்கு அரசு முறையில் சிறப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபற்றி போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‛‛சிறந்த வரவேற்புக்கு நன்றி. மகிழ்ச்சியான இந்த வரவேற்புக்கு நண்பரான பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. இந்தியா-பிரிட்டன் இடையே இப்போது இருக்கும் உறவு போன்று இதற்கு முன்பு பலமாக இருந்ததாக நான் நினைக்கவில்லை'' என்றார்.

அடுத்தடுத்து என்ன
இதையடுத்து அவர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார். அதன்பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐதராபாத் மாளிகையில் மதியம் 1 மணியளவில் இந்தியா-பிரிட்டன் சார்பில் சந்திப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.

1 பில்லியன் பவுண்ட்
இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்தியா-பிரிட்டன் இடையே 1 பில்லியன் பவுண்ட்டுக்கும் அதிகளவில் ஒப்பந்தங்கள் செய்யப்பட உள்ளதாக குறிப்பாக ப சாப்ட்வேர் முதல் சுகாதாரத்துறை வரை புதிய முதலீடுகள், ஏற்றுமதி ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட உள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து முழுவதும் கிட்டத்தட்ட 11,000 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரிட்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சென்னையில் ஆசிய பசிபிக் தலைமையகம்
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எலக்ட்ரிக் பஸ் ஆர்டி மற்றும் சென்னையில் ஆசிய பசிபிக் தலைமையகம் திறக்கப்படும். இதன்மூலம் 1000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தியாவின் முன்னனி நிறுவனமான பாரத் போர்ஜ், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான தெவ்வா மோட்டார்ஸ் நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் 500 புதிய வேலைகளை உருவாக்க உள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனமான மாஸ்டெக் அடுத்த மூன்று ஆண்டுகளில் இங்கிலாந்து முழுவதும் 79 மில்லியன் பவுண்டுகள் முதலீடு செய்வதால் சுமார் 1,600 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.

இந்தியா-பிரிட்டன் உறவு எப்படி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இடையே நல்ல நட்பு உள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடிடி ஆகியோர் இருநாடுகளுக்கு இடையேயான மூலோபாய கூட்டாண்மையை ஒப்புக்கொண்டனர். இதில் 530 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான முதலீடு அறிவிக்கப்பட்டது. இந்த முதலீடு மூலம் வர்த்தகம், சுகாதாரம், காலநிலை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் இருநாடுகளுக்கும் இடையே ஆழமான உறவு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு G7 மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications