தொடர் குண்டு வெடிப்புகளின் காலம் முடிந்துவிட்டது! செங்கோட்டையில் முழங்கிய பிரதமர் மோடி
டெல்லி: நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக தேசிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஏற்றியுள்ளார். பின்னர் உரையாற்றிய அவர், "இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்புகளின் காலம் முடிந்துவிட்டது. நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை அடைந்து 77 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஒவ்வொரு சுதந்திர தினத்தின்போதும் நமது நாடு ஓரடி முன்னெடுத்து வைத்து நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்த சுதந்திர தினமும் நாட்டை மேலும் ஓரடி முன்னேற்றும் வகையில் அமைய வேண்டும் என்கிற நோக்கத்துடன் அனைவரும் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 1,800 சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல இவ்விழாவில் தமிழக விவசாயிகள் உள்பட 45 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றிருக்கின்றனர். எனவே டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டை வளாகம் எஸ்பிஜி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 10,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் செங்கோட்டை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய கொடியை ஏற்றிய பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "தற்போது நாம் எடுத்துவரும் மாற்றம் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும்" என்று கூறியுள்ளார். அவரின் முழு உரை பின்வருமாறு, "இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர்தான். நம்முடைய நாடுதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதை உருவாக்க இன்னுயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
மணிப்பூர் மாநிலத்தை பொறுத்த அளவில் விரைவில் அமைதி திரும்பும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தில் மணிப்பூர் மக்களுக்கு நான் அமைதியை உறுதி அளிக்கிறேன். அங்கு நடைபெறும் அனைத்து வன்முறை சம்பவங்களுக்கும் அமைதியான முறையில் தீர்வு காணப்படும்.
எல்லா வளங்களும் இருந்த நம்முடைய நாட்டில் வெளிநாட்டினர் புகுந்து அந்த வளங்களை கொள்ளையடித்தனர். இருப்பினும் நாம் இதனால் சோர்ந்துவிடவில்லை. தேசத்தை வலிமையுடன் கட்டமைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். நம் நாட்டின் சக்தியே பெண்களும், இளைஞர்களும்தான். இவர்கள் நினைத்தால் பெரும் மாற்றங்களை கொண்டுவர முடியும். அந்த வகையில் நம்முடைய இந்தியா உலகிற்கே மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது. தற்போது நாம் எடுத்துவரும் மாற்றம் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
தற்போது நாம் எடுத்துவரும் மாற்றம் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு தாக்கம் நிறைந்ததாக இருக்கும். நாட்டின் மக்கள் தொகையும், வேற்றுமையில் ஒற்றுமையும், நீடித்திருக்கும் ஜனநாயகமும் தான் நமது சக்திக்கான காரணம். இவற்றை அடிப்படையாக கொண்டு நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில் தடுமாற்றம் எதுவுமில்லை. நமது பயணத்தில் பாதை விலகல் கிடையாது.
இந்தியா தற்போது தொழில் நுட்ப புரட்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய உலகம் விரும்புகிறது. இந்தியா தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக்கொள்ளும் திறனை பெற்றுள்ளது. இளைஞர்கள்தான் நமது நாட்டின் வளர்ச்சியை வழி நடத்திச்செல்கின்றனர். உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக நாம் உருவெடுத்திருக்கிறோம். இவை அனைத்திற்கும் காரணமாக இருக்கும் நாட்டின் உழைக்கும் மக்களுக்கு நான் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
விளையாட்டு துறையை பொறுத்த அளவில் நம்முடைய கிராமங்களிலிருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர். அவர்களுக்கான சரியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் இந்த உலகத்தையே இந்தியாதான் வழிநடத்துகிறது. உலகம் நிலைத்தன்மையுடன் இயங்குவதற்கு இந்தியாதான் காரணம்.
இந்தியா இந்த பயணத்தில் நிலையாக இருக்க நிலையான அரசு தேவை. நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் விரும்புகின்றனர். நாடு மிகப்பெரிய வளர்ச்சியை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் இதுவே நமது தாரக மந்திரம். 2014,2019ம் ஆண்டு பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தேர்வு செய்தனர். பெரும்பான்மை அரசால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியும்.
இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில் அந்த ஊழலை நீக்கினோம். மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். இந்த நம்பிக்கையை காப்பாற்றி மாற்றங்களை கொண்டு வந்தோம். புதிய நம்பிக்கையோடு இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. முத்ரா யோஜனா திட்டத்தால் புதிய வேலை வாய்ப்புகள், ஏழைகளை மேம்படுத்துவதற்காக கரீப் கல்யாண் யோஜனா திட்டம் போன்ற திட்டங்களால் இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. விரைவில் விஸ்வ கர்மா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. தற்போது வரை வறுமைக்கோட்டில் இருந்து 12.5 லட்சம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் போருளாதாரத்தை உயர்த்தி உலக பொருளாதாரத்தில் நம்மை முன்னோக்கி உந்தி தள்ளியுள்ளது. நாம் விரைவில் 3வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறுவோம்.
ஒரு காலத்தில் நாட்டில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஆனால் தற்போது இது முடிவுக்கு வந்திருக்கிறது. நாட்டின் இன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறைந்துவிட்டன. நாடு தற்போது பாதுகாப்பாக இருப்பதாக மக்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications