"வயநாடு நிலச்சரிவு குறித்து பொய் தகவல்.." அமித் ஷா மீது காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்! என்ன மேட்டர்
டெல்லி: கேரள மாநிலம் வயநாட்டில் மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே கேரள அரசுக்கு எச்சரித்து இருந்ததாக உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். இருப்பினும், அதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்திருந்தார். இதற்கிடையே அமித் ஷா இந்தப் பேச்சுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாட்டில் மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உரிமை மீறல் நோட்டீஸ்: இந்த நிலச்சரிவு தொடர்பாக அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் சில கருத்துகளைக் கூறியிருந்தார். இதற்கிடையே மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளது. வயநாடு நிலச்சரிவு தொடர்பாகத் தவறான தகவலைக் கூறியதாகக் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்துள்ளது. மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் தீர்மான நோட்டீஸை தாக்கல் செய்தார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கேரள அரசுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமித் ஷா கூறியிருந்தார். மத்திய அரசு எச்சரிக்கை விடுத்த போதும் கேரள அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலைக் கூறியுள்ளதாக அமித் ஷா மீது உரிமை மீறல் தீர்மானத்தைக் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்துள்ளார்.
தவறாக வழிநடத்துகிறார்: அந்த நோட்டீஸில், "மத்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகக் கூறி உள்துறை அமைச்சர் ராஜ்யசபாவை தவறாக வழிநடத்தினார் என்பது தெளிவாகிறது. ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் சபையைத் தவறாக வழிநடத்துவது மீறலாகும். இது சபையை அவமதிக்கும் செயல்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அமித் ஷா பேச்சு: கடந்த ஜூலை 31ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் உரையாற்றினார். அப்போது அவர் ஜூலை 23ம் தேதியே கேரள அரசுக்கு நிலச்சரிவு குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் கூறியிருந்தார். அப்போது அமித் ஷா மேலும் பேசுகையில், "ஜூலை 23ம் தேதி நிலச்சரிவுக்கு ஏழு நாட்களுக்கு முன்பே மத்திய அரசு, கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
வயநாடு நிலச்சரிவு எதிரொலி.. "இந்த 8 மாவட்டங்களை உடனே கண்காணியுங்கள்.." தமிழக அரசு உத்தரவு
பின்னர் ஜூலை 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நாங்கள் அவர்களை மீண்டும் எச்சரித்தோம். ஜூலை 26ம் தேதி மீண்டும் எச்சரிக்கை கொடுத்தோம். 20 செ.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.. இதனால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என எச்சரித்தோம்" என்றார்.
பினராயி விஜயன் மறுப்பு: ஆனால், அமித் ஷாவின் இந்த பேச்சுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் மறுத்துள்ளார். வானிலை மையம் வயநாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்ததாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் வயநாட்டில் 500 மிமீ மழை பெய்துள்ளதாகவும் இது வானிலை மையம் கணித்ததை விட மிக அதிகம் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அமித் ஷா பேச்சுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications