பிரியங்கா காந்தி அரசியல் வருகை பாஜகவிற்குதான் லாபம்!
Recommended Video

டெல்லி: பிரியங்காவை அரசியலுக்கு அழைத்து வந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கே பின்னடைவாகவும் வாய்ப்பு இருப்பதாக ஒரு பார்வை முன் வைக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதிக்கான பொதுச் செயலாளராக சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
பிரியங்கா காந்தியின் நிர்வாக திறமை பற்றி அறிந்த காங்கிரஸ் முக்கிய புள்ளிகள், இந்த அறிவிப்பால், குஷியில் உள்ளபோதிலும், பாஜக இதை வேறு மாதிரியாக மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

கூர்மையான கத்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தோல்வியை அக்கட்சி ஒப்புக்கொண்டதால்தான், சகோதரி பிரியங்கா காந்தியை கட்சிக்குள் கொண்டு வந்துள்ளது என்பது பாஜகவின் முதல் ரியாக்ஷனாகும். பிரியங்கா வருகை காங்கிரசுக்கு பலத்தை தரும் என அக்கட்சி நினைக்கலாம், ஆனால், இந்த முடிவு இரு பக்கமும் கூர்மை கொண்ட கத்தியை கையாளுவதை போன்ற முடிவு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பாஜகவிற்கு சவால்
உத்தர பிரதேசத்தில் பாஜகவின் வெற்றியை தடுக்கும் வகையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய முறையே சோனியா மற்றும் ராகுல் காந்தி எம்.பி.க்களாக உள்ள தொகுதிகளில் தங்கள் கூட்டணி போட்டியிடாது என்றும் அறிவித்துள்ளது. இது அவ்விரு தொகுதிகளிலும் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் முடிவாக பார்க்கப்படுகிறது. மேலும் பாஜகவிற்கு இதனால் கடும் போட்டி சூழல் உருவானது.

பாஜகவிற்கு பலன்
ஆனால், மாயாவதி, முலாயம்சிங் ஆகியோர் பலமாக உள்ள தொகுதிகளில் பிரியங்காவை பொறுப்பாளராக நியமித்துள்ளது காங்கிரஸ். அவ்விரு தலைவர்களின் பலம் தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் ஆதரவுதான். பிரியங்காவிற்கும் இந்த பிரிவு மக்களிடம் நல்ல மதிப்பு உள்ளதால் வாக்குகள் சிதறும். இது பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

வாக்குகள் சிதறும்
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் சிதறும் நிலையில், உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடை கொண்டு வந்துள்ள பாஜகவிற்கு ஆதரவாக அந்த ஜாதி பிரிவினர் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் கிடைக்கும். எனவே பிரியங்காவுக்கு எந்த அளவுக்கு உ.பி.யில் ஆதரவு அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு பாஜகவிற்கு பலன்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

வாரிசு அரசியல்
மேலும் பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா, மீதான வழக்குகளை முன்வைத்து பாஜக பிரச்சாரம் செய்வது, வாரிசு அரசியலை காங்கிரஸ் மீண்டும் கையில் எடுத்துள்ளது போன்றதும், அந்த கட்சிக்கு பின்னடைவை தரக்கூடியவையாகும்.

காங்கிரசுக்கு பின்னடைவு
80 தொகுதிகளை கொண்ட, உத்தர பிரதேச மாநிலத்தில் பெறும் வெற்றிதான், லோக்சபா தேர்தலில் ஆட்சியமைக்க உதவும். எனவே அனைத்து கட்சிகளுக்கும் அந்த மாநிலம் முக்கிய தொகுதியாகும். இந்த நிலையில்தான், பிரியங்காவின் வருகை பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க உதவும் என்ற கருத்துக்கள் காங்கிரசுக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளன.












Click it and Unblock the Notifications