"என் சகோதரனுக்காக நான் என் உயிரைக் கூட கொடுப்பேன்.." பிரியங்கா காந்தி உருக்கம்
டெல்லி: ராகுல் காந்திக்கும் பிரியங்கா காந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் சாடியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பிரியங்கா காந்தியே பதில் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் பிப்.10ஆம் தேதி தொடங்கி சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஒரே நேரத்தில் 3 முக்கிய செயற்கைகோள்கள்.. நாளை விண்ணில் ஏவும் இஸ்ரோ.. என்ன சிறப்பு?
மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 202 தொகுதிகளில் வெல்ல வேண்டும்
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இருப்பினும், பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கடந்த 2 ஆண்டுகளாகவே உபி-இல் முகாமிட்டு கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த முறை கணிசமான இடங்களில் வெல்ல வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் திட்டம்.
தீவிர பிரசாரம்
இதற்கா பெண்களை முன்னிறுத்து காங்கிரஸ் கட்சி பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 40% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், உத்தரப் பிரதேசத்தில் அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் அங்கு முடிந்துள்ள நிலையில், பிரியங்கா காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார்.
குற்றச்சாட்டு
இதற்கிடையே சமீபத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் இடையே மோதல் உள்ளதாகவும் அது காங்கிரஸ் கட்சியையே ஒட்டுமொத்தமாக அழித்து வருவதாகச் சாடியிருந்தார். இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், யோகி ஆதித்யநாத்தின் இந்த கருத்துக்குப் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தனக்கும் தனது சகோதரருக்கும் இடைய மோதல் எதுவும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
விளக்கம்
இது தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி,"என் சகோதரனுக்காக நான் என் உயிரைக் கூட கொடுப்பேன். அதேபோல அவரும் எனக்காக அவரும் உயிரைக் கூட கொடுப்பார். எங்களுக்கு இடையே எங்கே மோதல் உள்ளது. யோகி ஆதித்யநாத் மனதில் தான் மோதல் உள்ளது. பாஜகவில் அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இடையே தான் மோதல் உள்ளது. அதைச் சமாளிக்கத் தான் அவர் இப்படிச் சொல்லி வருகிறார்" என்றார்.