போர்க்கோலம் பூண்டது டெல்லி ஜந்தர் மந்தர்... உ.பி.யில் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்யக்கோரி முழக்கங்கள்..!
டெல்லி: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் பாரபட்சமற்ற முறையில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசை கலைக்கக் கோரியும் வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இடதுசாரிகள், ஆம் ஆத்மி, பீம் ஆர்மி, உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்தோர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் ஜந்தர் மந்தரில் சாரை சாரையாக குவிந்தனர். இதனால் பல மாதங்களுக்கு பிறகு டெல்லி ஜந்தர் மந்தர் போர்க்கோலம் பூண்டுள்ளது.
உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத் உருவ பொம்மை எரிப்பு.. தமிழகத்தில் 2-வது நாளாக காங். போராட்டம்!
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் பதவி விலகும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என மிகவும் உறுதிப்படக் கூறியிருக்கிறார் பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத். போராட்டத்தில் பங்கேற்க 100 பேருக்கு மட்டும் டெல்லி போலீஸ் அனுமதி வழங்கிய நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.
இதனிடையே போராட்டக்களத்திற்கு வந்த டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், ஹத்ராஸில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை தூக்கில் தொங்கவிட வேண்டும் என ஆவேசம் காட்டினார். குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் தப்பவிடக் கூடாது எனவும் நாட்டில் இனி யாரும் இது போன்ற காரியங்களில் ஈடுபட அஞ்சும் அளவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு முன்னதாக ஜந்தர் மந்தர் வந்திருந்த மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச மாநில அரசு இனியும் அதிகாரத்தில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை எனக் கூறினார். தங்களுக்கு தேவை நீதி தான் எனவும் ஹத்ராஸ் விவகாரத்தில் மத்திய அரசும், பாஜக தலைமையும் வாய்மூடி மவுனியாக இருப்பது அவர்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளார்.