போலி சான்றிதழ் பூஜா கேத்கர் விடுவிப்பு..ஐஏஎஸ், பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான விதிகள் என்ன சொல்கிறது?
டெல்லி: போலி சான்றிதழ் விவகாரங்களில் சிக்கியதால் பயிற்சி ஐஏஎஸ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் மகாராஷ்டிராவின் பூஜா கேத்கர். மகாராஷ்டிராவின் புனே மாவட்ட பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது அதிகார துஷ்பிரயோகம், போலி சான்றிதழ் சர்ச்சைகளில் சிக்கியதால் ஐஏஎஸ் பயிற்சியில் இருந்து பூஜா கேத்கர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்கிறது. 2023-ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆனால் பூஜே கேத்கர் பல்வேறு சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கினார்.

புனே ஆட்சியர் அலுவலகத்தில் தனி அறை கோரியது, காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க தலையிட்டது, சொந்த வாகனத்தில் சுழல் விளக்கை பயன்படுத்தியது, போலி மாற்றுத் திறனாளி சான்றிதழ்கள் கொடுத்தது என அடுத்தடுத்த புகார்களில் சிக்கினார் பூஜா கேத்கர். இதனால் பூஜா கேத்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது பயிற்சி ஐஏஎஸ் பணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் பூஜா கேத்கர்.
இதனையடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் நடத்தை விதிகள், அவர்கள் மீதான நடவடிக்கைக்கான விதிகள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
விதிகள் என்ன?: பணிபுரியும், பயிற்சி குடிமைப் பணி அதிகாரிகளுக்கான அகில இந்திய சேவைகள் (நடத்தை) விதிகள்: அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் AIS நடத்தை விதிகளின்படி அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு பயிற்சியைத் தொடங்குகின்றனர். தங்களது பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். தங்களது பணித் தகுதிக்கு தகுதியற்ற எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவும் கூடாது. பணிக் காலத்தில் தனியார் அல்லது அரசு சாரா நிறுவனங்களில் தங்களது குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பை தங்களது செல்வாக்கைப் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நடத்தை விதிகளில் கூடுதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இது பெரும் சர்ச்சையானது.
எப்படி நடந்து கொள்ள வேண்டும்?: அதில், ஐஏஎஸ் பணிக்குரிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்; நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும், அரசியல் ரீதியாக நடுநிலைமையுடன் இருக்க வேண்டும், அனைத்து தனிநபர்களிடமும் நன்னடத்தையை பின்பற்ற வேண்டும், பொதுமக்கள் நலன் கருதி சுதந்திரமாக தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும், தனிபர்களின் ஆதாயங்களை கவனத்தில் கொள்ளாமல் இத்தகைய முடிவெடுக்க வேண்டும் என்பதும் அடங்கும்.
அன்பளிப்பு: அதிகாரிகள் நிதி அடிப்படையிலோ பொருட்கள் அடிப்படையிலோ ஆதாயம் பெறக் கூடாது. தங்களது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து ரூ25,000-க்கும் அதிகமான மதிப்புள்ளவற்றை அன்பளிப்பாக பெறவும் கூடாது.
என்ன கிடைக்காது?: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் பயிற்சி காலத்தின் போது நிர்ணயிக்கப்பட்ட ஊதியம், பயணப்படி உள்ளிட்டவற்றை பெறலாம். ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களுக்கு இணையான சலுகைகளைப் பெற முடியாது. உதாரணமாக விஐபி நம்பர் பிளேட்டுடன் கூடிய அரசு கார், அரசு பங்களா, அலுவலகங்களில் பணியாளர்களுடன் தனி அறை, போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றை பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் பெற முடியாது.
தகுதி நீக்கம்: பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளை தகுதி நீக்கம் செய்யவும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஐஏஎஸ் பணிக்கு தகுதியற்றவர் என கண்டறிந்தாலோ, தகுதியான படிப்புகள், கடமைகளை செய்யாமல் இருந்தாலோ உரிய விசாரணைகளுக்குப் பின்னர் முடிவு மேற்கொள்ளப்படும்.
டிஸ்மிஸ்: ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் குடிமைப் பணியில் இணைகிறவர்கள் போலி சான்றிதழ்கள் கொடுத்திருந்தால் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவர்; இந்த டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு எதிராக தீர்ப்பாயத்தில் முறையிடலாம்.












Click it and Unblock the Notifications