காஷ்மீர் தாக்குதல்.. ஜம்முவில் விஹெச்பி, பஜ்ரங் தள் போராட்டம்.. வாகனங்கள் எரிப்பு, 144 தடை உத்தரவு
டெல்லி:புல்வாமா தாக்குதலை கண்டித்து ஜம்மு நகரில் நடந்த போராட்டத்தில் வாகனங்கள் கொளுத்தப்பட்டன.கல்வீச்சு என வன்முறை சம்பவங்கள் தொடர்வதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தானை பின்னணியாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடிமருந்து நிரப்பிய காருடன் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி தாக்குதல் நடத்தினார்.

தாக்குதலில் 44 வீரர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கு இருக்கிறது என்று மத்திய அரசு நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது.
பின்னர் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாகிஸ்தானை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படையினர் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அனுமதி அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந் நிலையில், ஜம்மு நகரில் பாகிஸ்தானை கண்டித்து சிவசேனா, பஜ்ரங்தள் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தின. கைகளில் தேசிய கொடி ஏந்தி அவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறியது.
குஜ்ஜார் நகர் பகுதியில் வன்முறை தொடங்கியது. வன்முறையின் போது அங்கிருந்த 80க்கும் மேற்பட்ட வாகனங்கள் சூறையாடப்பட்டன. 8க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அதை தொடர்ந்து, ஜானிபுர், பக்ஷி நகர், சென்னி ஹீமத் ஆகிய பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் கூடுதலாக குவிக்கப்பட்டனர். அமைதியாக இருக்குமாறு போலீசார் கடுமையாக எச்சரித்தும் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து பதற்ற நிலை நீடிப்பதால், ஜம்மு நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் 12 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications