பஞ்சாப் காங். பஞ்சாயத்துக்கு முடிவு வருமா? பிரியங்கா காந்தியுடன் சித்து டெல்லியில் ஆலோசனை
டெல்லி: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள போகிற பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸின் நவ்ஜோத்சிங் சித்து இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர்சிங் தமது தலைமையில் சட்டசபை தேர்தலை கட்சி எதிர்கொள்ள வேண்டும் என விரும்புகிறார்.

சித்துவுக்கு முக்கியத்துவம்
ஆனால் டெல்லி மேலிடமோ சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கலாம்; அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கலாம் என விரும்புகிறது. இது தொடர்பாக அமரீந்தர்சிங்குடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அமரீந்தர்சிங் நிராகரிப்பு
இதனை அமரீந்தர்சிங் திட்டவட்டமாக ஏற்க மறுத்துவிட்டார். சித்துவை துணை முதல்வராக்கவும் முடியாது; மாநில காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்க அனுமதிக்க முடியாது என்பது அமரீந்தர்சிங் நிலைப்பாடு.

சித்து- பிரியங்கா சந்திப்பு
இது தொடர்பாக சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா நடத்திய சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில் இன்று டெல்லியில் பிரியங்கா காந்தியை சித்து சந்தித்து பேசினார். பஞ்சாப் தேர்தலை எதிர்கொள்வது பற்றி இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராகுல் முயற்சிகள்
ராகுல் காந்தியும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பிரச்சனைக்கு தீர்வு காண இடைவிடாமல் முயற்சி செய்து வருகிறார். கடந்த சில வாரங்களாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பலரையும் ராகுல் காந்தியும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிரியங்கா, ராகுலின் இந்த முயற்சிகள் பஞ்சாப் காங்கிரஸில் அமைதியை கொண்டுவருமா? என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications