பஞ்சாப் தேர்தல்: திடீர் திருப்பம்- கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியில் காங். சித்து? முதல்வர் வேட்பாளர்?
டெல்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக ஆம் ஆத்மி கட்சியில் காங்கிரஸ் கட்சியின் நவ்ஜோத்சிங் சித்து இணையப் போகிறாரா? என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. அப்படி ஆம் ஆத்மி கட்சியில் சித்து இணைந்தால் அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத்சிங் சித்து, 2017-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

சித்துவுக்கு முக்கியத்துவம்
இதனால் சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. அதேபோல் சித்துவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவும் பரிந்துரைத்துள்ளது காங். மேலிடம். ஆனால் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சித்து நியமனத்தில் இழுபறி
இது தொடர்பாக நவ்ஜோத்சிங் சித்து, அமரீந்தர்சிங் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை பலமுறை சந்தித்து விவாதித்தனர். ஆனாலும் நவ்ஜோத்சிங் சித்து விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

ஆம் ஆத்மிக்கு புகழாரம்
இந்நிலையில் நவ்ஜோத்சிங் சித்து, ட்விட்டரில் திடீரென ஆம் ஆத்மி கட்சியை புகழ்ந்து பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், போதைப் பொருள், விவசாயிகள் பிரச்சனை, சீக்கியர்களின் புனித நூல் கிழிக்கப்பட்டது என அனைத்தையும் நான் பேசியிருக்கிறேன். நான் முன்வைக்கும் பஞ்சாப் மாடல் குறித்தும் ஆம் ஆத்மி அறிந்து வைத்துள்ளது. என்னுடைய மக்களுக்கான பணிகளை எதிர்க்கட்சிகளால் நிராகரிக்க முடியாது என பதிவிட்டுள்ளார். அத்துடன் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் தம்மை புகழ்ந்து பேசும் வீடியோவையும் சித்து பகிர்ந்துள்ளார்.

கெஜ்ரிவாலுடன் கை கோர்க்கிறாரா சித்து?
ஆம் ஆத்மி பக்கம் திடீரென சித்துவின் காற்று வீசத் தொடங்கியிருப்பதால் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு தாவப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பஞ்சாப் தேர்தலில் சீக்கியர்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் சீக்கியர் ஒருவர்தான் முதல்வர் வேட்பாளர் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தும் இருக்கிறார்.

சித்து ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்?
இதனால் ஆம் ஆத்மி கட்சியில் நவ்ஜோத்சிங் சித்து சேர்ந்தால் அவரையே அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான சிரோமணி அகாலிதளம் வலிமை குறைந்து வருவதால் ஆட்சியை கைப்பற்றுவதில் ஆம் ஆத்மி கட்சி படுமுனைப்பாக இருக்கிறது. இந்த நிலையில் நவ்ஜோத்சிங் சித்துவின் இந்த பதிவு பஞ்சாப் தேர்தலில் திருப்பங்களை ஏற்படுத்துமோ? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications