ரஃபேல்.. உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜரான விமானப்படை அதிகாரிகளிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி
Recommended Video
டெல்லி: ரஃபேல் போர் விமானம் தொடர்பான வழக்கில், நேரில் ஆஜரான இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறி, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகிய நீதிபதிகள் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நடைபெற்று வரும், இந்த விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதத்தை முன்வைத்தார்.
மனுதாரர்கள் பாதுகாப்பு துறை வல்லுனர்கள் கிடையாது என்பதால், அவர்களுக்கு ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலை விபரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் வாதம் முன் வைத்தார்.
மத்திய அரசு நாடாளுமன்றத்திலேயே, விலை விபரங்களை தெரிவித்துவிட்ட நிலையில், இப்போது ரகசியம் காப்பது ஏற்புடையது அல்ல என்று பிரசாந்த் பூஷன் தனது வாதத்தை முன் வைத்தார். மேலும், முதலில் போடப்பட்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தை விட, இப்போது, 40 விழுக்காடு அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அதே நேரம், இது குறித்து நீதிமன்றம் பிறகு முடிவு எடுத்துக் கொள்ளும், அதுவரை விலை விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
ரஞ்சன் கோகாய் மேலும் கூறுகையில், இந்திய விமானப் படையில் இருந்து அதிகாரிகள் யாராவது நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்களா? கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு தயாராக உள்ளனரா? ஏனெனில் விமானப்படை தொடர்பாகதான் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே விமானப்படை அதிகாரிகள் கருத்தை கேட்க விரும்புகிறோம் என்று அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலை நோக்கி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து இந்திய விமானப்படை அதிகாரிகளான ஏர் மார்ஷல் மற்றும் ஏர் துணை மார்ஷல் உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். ஆனால் அதற்குள்ளாக உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் கூடியபோது, ஏர் துணை மார்ஷல் சலபதியிடம் ரஞ்சன் கோகாய் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
இந்திய விமானப்படையில் லேட்டஸ்ட்டாக இணைக்கப்பட்ட போர் விமானம் எது என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, சுகோய்-30 என சலபதி பதில் அளித்தார். இது 4வது தலைமையை சேர்ந்த விமானமா என்ற தலைமை நீதிபதி கேள்விக்கு, 3.5வது தலைமுறை போர் விமானம் என்று சலபதி பதிலளித்தார். மேலும் இந்திய விமானப்படைக்கு 4 மற்றும் 5வது தலைமுறை போர் விமானங்கள் தேவை என்பதால், ரஃபேல் ஒப்பந்தம் அவசியப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் நிலுவையில் இருந்தபோது, 2015ம் ஆண்டு பிரதமர் மோடி, புதிதாக ஒரு ஒப்பந்தத்தை போட அவசியம் என்ன என்று நீதிபதி ஜோசப் கேள்வி எழுப்பினார்.