குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலி: ராகுல், ராமதாஸ், தினகரன் அதிர்ச்சி-மத்திய அரசுக்கு கோரிக்கை!
டெல்லி: குவைத் தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் பலியான சம்பவம் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.
தெற்கு குவைத்தின் மங்கஃப் நகரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் கருகி உயிரிழந்தனர். மேலும் 30 இந்தியர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் குறித்த விவரங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மேலும் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விகே சிங், குவைத் செல்கிறார்.
குவைத் தீ விபத்து துயரத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குவைத்தில் 40 இந்தியர்கள் தீயில் கருகி பலியான துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் நிலைமை கவலை அளிக்கிறது. அந்த நாடுகளில் பணிபுரிகிற இந்தியர்கள் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் (பாமக நிறுவனர்): குவைத் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்தவர்களில் இரு தமிழர்கள் உள்ளிட்ட நால்வர் இந்தியர்கள் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் உள்ளிட்ட உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குவைத் தீ விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையாக உடல்நலம் பெற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீ விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வரவும், அவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டைப் பெற்றுத் தரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு தமிழர்கள் உட்பட 40க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அதே விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவரும் பூரண குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் இருவர் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.
செல்வப் பெருந்தகை (தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி): தெற்கு குவைத் மங்காப் நகரில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. இதில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இன்னும் எத்தனை பேர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.
குவைத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குவைத் அரசோடு பேசி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கவும் ஒன்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கேட்டுக் கொள்கிறேன்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications