டெல்லியை கலக்கிய ராகுல் - கமல் கூட்டணி.. “தமிழில் பேசுங்க”.. அவர் வைத்த கோரிக்கை! ஒரே உற்சாகம்! ஆஹா!
டெல்லி : டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஆங்கிலத்தில் உரையாற்றிய நிலையில், அவரைத் தமிழில் பேசுமாறு கேட்டுக்கொண்டார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. இதையடுத்து, கமல்ஹாசன் தமிழில் பேச, கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
டெல்லியில் நடைபெறும் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று கலந்துகொண்டார். பின்னர் செங்கோட்டையில் மேடையில் உரையாற்றிய அவர், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன், ராகுல் காந்தி தமிழில் பேசச் சொன்னார் எனத் தெரிவித்தார்.
இந்திய குடிமகனாக ராகுலின் தேசிய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ளேன். ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்பது எனது அரசியல் பயணத்தில் பாதிப்பை ஏற்படும் என்று பலர் கூறினார்கள். ஆனால் எனது மனசாட்சியை கேட்டு யாத்திரையில் பங்கேற்பது என முடிவு செய்தேன் என கமல் உரையாற்றியுள்ளார்.

ராகுல் யாத்திரையில் கமல்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். இந்த நடைபயணம் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளது. இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். இன்று டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

தமிழில் பேசுங்க
டெல்லி செங்கோட்டையில் பாரத் ஜோடோ யாத்திரை கூட்டத்தில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிய கமல்ஹாசன், "நான் ஏன் இங்கு வந்தேன் என்று எல்லோரும் கேட்கிறார்கள். என் அப்பா ஒரு காங்கிரஸ்காரர். எனக்கு பல சித்தாந்தங்கள் இருந்தன. நான் ஒரு நடிகனாக, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்தாலும், இங்கு ஒரு இந்தியனாகவே வந்துள்ளேன்" என்று தெரிவித்தார். கமல்ஹாசன் பேசிக் கொண்டிருந்தபோதே ராகுல் காந்தி, கமலை தமிழில் பேசுமாறு கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் தமிழில் பேச, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆங்கிலத்தில் அதனை மொழிபெயர்த்தார்.

தமிழில் பேசிய கமல் - மொழிபெயர்த்த ஜோதிமணி
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், "ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றுதான் நினைத்தேன், ராகுல் காந்தி தமிழில் பேசச் சொல்கிறார். ராகுல் காந்தி தன்னை ஒரு தமிழன் என அடையாளப்படுத்திக் கொண்டார். ஆனால், அதற்காக மட்டும் அவரை என் சகோதரனாக நினைக்கவில்லை. இது இரண்டு கொள்ளுப்பேரன்மார்கள் கலந்துகொள்ளும் யாத்திரை. அவர் நேருவின் வழியில் வந்தார். நான் காந்தியின் வழியில் வந்திருக்கிறேன். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய நாட்டின் அரசியலமைப்புக்கு நெருக்கடி என்றால் நான் தெருவில் வந்து நிற்பேன். நான் அதற்காகவே இந்த யாத்திரையில் பங்கு கொண்டுள்ளேன்.

எனது அரசியல் பாதிக்குமா?
நான் இங்கு வருவதற்கு முன்னதாக பலரும் எனக்கு அறிவுரை கூறினார்கள். நீங்கள் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு சென்றால் உங்களது அரசியல் பயணம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். எனது அரசியல் பயணம் எனக்காக உருவானது இல்லை. நாட்டுக்காக உருவானது. நாடு என்று வரும்போது இங்குள்ள பல்வேறு கட்சிகளின் கட்சி கொடிகளின் நிறங்கள் தாண்டி, நமக்கு தேசியக் கொடியில் உள்ள மூன்று நிறங்களே தெரிய வேண்டும். அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன்.

கிலோ மீட்டர் கணக்கை பற்றி பேசவில்லை
நான் ராகுல் காந்தி யாத்திரை தொடங்கிய இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டில் வாழும் குடிமகன் தான். இந்த யாத்திரை இப்போதுதான் தொடங்கியுள்ளது. இன்னும் இது பல தூரம் செல்ல வேண்டி உள்ளது. நான் கிலோ மீட்டர் கணக்கை பற்றி பேசவில்லை. மாறாக இந்த நடை பயணம் நமது பாரம்பரியமிக்க வரலாற்றிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. இது ஒன்றும் ஐந்தாண்டு திட்டமல்ல. இது அதையும் தாண்டி அடுத்து வர இருக்கும் தலைமுறைகளுக்கானது. ராகுல் காந்தியை நான் மிகவும் மதிக்கிறேன். அவரின் துணிச்சலான இந்த முடிவையும், மாநிலங்கள் தாண்டிய இந்த நடை பயணத்தையும் நான் ஆதரிக்கிறேன். அதற்கு வாழ்த்து கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.

கூட்டணிக்கு உறுதியான அஸ்திவாரம்
மக்கள் நீதி மய்யம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் - திமுக உள்ளிட்ட கட்சிகளின் மெகா கூட்டணியில் இணையும் வகையில் மநீம தலைவர் கமல்ஹாசன் வியூகம் வகுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் டெல்லியில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இந்தப் பயணமே, கூட்டணிக்கான உறுதியான அஸ்திவாரம், அதைத் தொடர்ந்து தமிழக அரசியலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று மநீம கட்சியினர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications