பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஒன்னும் அறிவிக்கல.. ஏன் இரட்டை வேடம்.? மத்திய அரசை சாடிய ராகுல்
டெல்லி: மக்களவையில் இன்று உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்தார். கேரளாவின் வயநாடு தொகுதியில் நிகழும் விவசாயிகளின் தொடர் தற்கொலை சம்பவங்கள் குறித்து மக்களவையில் பேசினார் ராகுல்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக தாக்கி பேசிய ராகுல் காந்தி, அண்மையில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகை ஏதும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

மக்களவையில் ஜீரோ ஹவரின் போது பேசிய ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விவசாயிகளிடமிருந்து கடனை வசூலிக்க பல வங்கிகள் பல்வேறு வழிமுறைகளை தீவிரமாக கையாண்டு வருகின்றன.
இதனால் இதுவரை சுமார் 18 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடனை திருப்பி செலுத்த விவசாயிகளுக்கு கேரள அரசு டிசம்பர் 31 2019 வரை அவகாசம் அளித்துள்ளது. ஆனால் இந்த கால நீடிப்பை பரிசீலித்து அதை நடைமுறைப்படுத்த, ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்து வருகிறது என ராகுல் புகார் கூறினார்.
விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கியிடம் பேசி, கேரள அரசின் ஒப்புதலுடன் விவசாயிகளுக்கு பறிமுதல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டக்கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.
விவசாயிகள் தாங்கள் பெறும் கடனுக்காக, சொத்து ஆவணங்களை வங்கிகளிடம் தருவதே ஒருகட்டத்தில் அவர்களின் தற்கொலைக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது என்றார்.
கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தங்களது வாழ்வையே முடித்து கொள்ளும் அவல சூழல் நிலவும் நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பட்ஜெட்டில் எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைக் கண்டு தாம் வருத்தமடைந்ததாக ராகுல் குறிப்பிட்டார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்பாக விவகாரங்களில் பிரதமரின் நிலைப்பாடுகளுக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள சில கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருவதையும் ராகுல் சுட்டிக்காட்டினார்.
ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய ராஜ்நாத் சிங், விவசாயிகளின் துயர நிலை கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டதல்ல. இந்தியாவை பல்லாண்டுகளாக ஆட்சி செய்தவர்களும் தான் விவசாயிகள் படும் துன்பத்திற்கு காரணம் என சாடினார்.












Click it and Unblock the Notifications